ஆந்திராவில் பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் அளித்த மருத்துவ மாணவி.. திடீர் தற்கொலை
ஆந்திராவில் பேராசிரியர்களின் பாலியல் தொல்லையால் மருத்துவ மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
சித்தூர்: ஆந்திரப் பிரதேசத்தில் கல்லூரி பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் மருத்துவக்கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், பிளிருவை சேர்ந்த 30 வயதான மருத்துவ மாணவி தற்கொலை செய்துள்ளார். இவர் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவப் படிப்பு படித்துவந்துள்ளார்.
இந்நிலையில் மாணவி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர்களாக உள்ள மருத்துவர்கள் டாக்டர் கிரீத்தி, டாக்டர் சசிகுமார் பாலியல் தொல்லை தருவதாக கல்லூரி நிர்வாகத்துக்கு புகார் அளித்துள்ளார். அதோடு ஆந்திரப் பிரதேச மாநில ஆளுநர் இஎஸ்எல் நரசிம்மனுக்கும் புகார் கடிதம் எழுதியுள்ளார்.
ஆனால், மாணவியின் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில்தான் மாணவி அண்மையில் நடந்த மருத்துவ தேர்வில் நன்றாக எழுதியும் தோல்வியடைந்துள்ளார். இதற்கு பாலியல் தொல்லை செய்த மருத்துவ பேராசிரியர்கள்தான் காரணம் என்பதையும் உணர்ந்துள்ளார்.
தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மனம் உடைந்து விரக்தியடைந்த மாணவி சித்தூர் மாவட்டம் பிளிருவில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
மாணவியின் மரணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி மாணவர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியதால் மாணவர்கள் பேராசிரியர்களை எதிர்த்து போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து, இந்தப் பிரச்சனை ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கவனத்துக்கு சென்றது. சந்திரபாபு நாயுடு மாணவியின் மரணம் குறித்தும் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பற்றியும் விசாரிக்க ஒரு குழு அமைத்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேச மாநில மருத்துவக் கல்லூரி இயக்குநர் கே.பாப்ஜி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்து மாணவியின் மரணம் குறித்து விசாரணை செய்தார். மேலும், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவ பேராசிரியர்கள் மீது விசாரணை நடத்த மருத்துவக் கல்லூரி நிர்வாகம் குழு அமைத்தது.
இந்த விசாரணைக் குழு உயிரிழந்த மாணவியால் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் கிரீத்தி, டாக்டர் சசிகுமார் ஆகிய இருவரையும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. மேலும், இன்னொரு டாக்டர் ரவிக்குமாரை பணி நீக்கம் செய்துள்ளனர். அது மட்டுமில்லாமல், ஆந்திர அரசு ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி முதல்வரையும் பணியிட மாற்றம் செய்து உத்தவிட்டுள்ளது.
மருத்துவ மாணவி மரணம் தொடர்பாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆந்திர முதல்வர் சந்திரபாபுர் நாயுடுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த பிரச்சனையில் நீங்கள் தீவிர அக்கறை செலுத்துவது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், உங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகள், எங்களுடைய ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி முதல்வர் உள்பட அப்படி அக்கறை செலுத்தவில்லை. அதற்கு மாறாக அவர்கள் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த பிரச்சனை அரசியலாக்கப்படுவதற்கு முன்பு உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து நீதி வழங்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளனர்.