18 வயதுக்குட்பட்ட பெண்ணை மணந்து கணவர் உறவு வைத்தாலும் பலாத்காரம்தான்.. உச்சநீதிமன்றம் அதிரடி
18 வயதுக்குட்பட்ட பெண்ணை மணந்து கணவர் உறவு வைத்தாலும் அது பலாத்காரம் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி: 18 வயதுக்குட்பட்ட பெண்ணை மணந்து கணவர் உறவு வைத்தாலும் பலாத்காரமே என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. குழந்தை திருமணம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பை அளித்துள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் 375-வது பிரிவில் 15 வயதுக்கு மேற்பட்ட சிறுமியை திருமணம் செய்து கணவர் உறவு வைத்து கொண்டாலும் அது பலாத்காரம் இல்லை என்கிறது. ஆனால் திருமண வயது 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயதுகுட்பட்டவர்கள் சிறுமியராகவே கருதப்படுகின்றனர்.
ஆகையால் இந்திய தண்டனைச் சட்டம் 375-வது பிரிவில் திருத்தம் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் மதன் பி லோகுர், நவன் குப்தா பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணையின் போது, இந்திய தண்டனைச் சட்டம் 375-வது பிரிவு சரிதான் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கடந்த மாதம் 6-ந் தேதி தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர். இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்து கணவர் உறவு வைத்தாலும் பலாத்காரம்தான் என அதிரடி தீர்ப்பளித்துள்ளனர்.