உம்மன் சாண்டி தனக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்தார்: சரிதா நாயார்- மறுக்கும் சாண்டி
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் உம்மன் சாண்டி தனக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாக சரிதா நாயார் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கேரளாவில் உள்ள தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த சரிதா நாயர், சூரிய மின்சக்தி ஊழல் வழக்கில் தான் பெரும்பாவூர் போலீஸ் காவலில் இருந்தபோது, 2013ம் ஆண்டு, எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அனைத்தும் முற்றிலும் சரியானது என தெரிவித்தார்.
முதல்வர் உம்மன் சாண்டி தனது போட் கிளவுசில் வைத்து பாலியல் ரீதியாக துண்புறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் உம்மன் சாண்டிக்கு அவரது உதவியாளர்கள் மூலமாக பல்வேறு தருணங்களில் 2 கோடியே 16 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும் பேட்டியில் சரிதா நாயர் குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவில் சட்டசபைத் தேர்தலில் உம்மன் சாண்டி போட்டியிட உள்ள நிலையில் சரிதா நாயரின் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூரிய மின்சக்தி ஊழல்
கேரள மாநிலத்தை உலுக்கிய ஊழல், சூரிய மின்சக்தி ஊழல். சரிதா நாயர் என்ற பெண், பிஜு ராதாகிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து கூட்டாக சூரிய மின்சக்தி உற்பத்திக்காக ஒரு போலி நிறுவனம் நடத்தி, முக்கிய அரசியல் தொடர்புகளை ஏற்படுத்தி, அந்த செல்வாக்கைக் கொண்டு பல கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக புகார் எழுந்தது.
சரிதாநாயர் வாக்குமூலம்
அதன்பேரில், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவராஜன் தலைமையில் கேரள அரசு ஒருநபர் கமிஷன் அமைத்தது. அந்த ஒரு நபர் கமிஷன் முன் சரிதா நாயர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர், முதல்வர் உம்மன்சாண்டிக்கு லஞ்சம் தந்ததாக கூறினார்.
ஹைகோர்ட் தடை
இது தொடர்பாக திரிச்சூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஒருவர் தாக்கல் செய்த தனிநபர் புகார் மனுவை நீதிபதி எஸ்.எஸ்.வாசன் கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி விசாரித்து, உம்மன்சாண்டி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். ஆனால் அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் உம்மன்சாண்டி முறையிட்டார். அதைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு கோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது.
டிவிக்கு சிறப்பு பேட்டி
இந்த நிலையில் சரிதா நாயர், அங்குள்ள டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சூரிய மின்சக்தி ஊழல் வழக்கில் நான் பெரும்பாவூர் போலீஸ் காவலில் இருந்தபோது, 2013ம் ஆண்டு, ஜூலை மாதம் 19ம் தேதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அனைத்தும் முற்றிலும் சரியானது என்றார்.
பாலியல் தொந்தரவு
உம்மன் சாண்டி தனது ‘கிளிப் ஹவுஸ்' இல்லத்தில் வைத்து என்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார். அவரை ஒரு தந்தை ஸ்தானத்தில் நான் பார்த்து வந்த தருணத்தில், அவர் இவ்வாறு நடந்து கொள்வார் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அந்த கடிதத்தில் எழுதி இருந்தவற்றை நான் மறுக்கவில்லை. அந்த கடிதத்தை எழுதியது நான்தான் என்று கூறியுள்ளார்.
சாண்டி மறுப்பு
அதே நேரத்தில் சூரிய மின்தகடு முறைகேட்டில் தொடர்புடைய சரிதா நாயர் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில், தான் தவறான முறையில் நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது, முற்றிலும் அடிப்படையற்றதாகும் என்று உம்மன் சாண்டி கூறியுள்ளார்.
எனக்கு எதிராக சதி
கேரள மாநிலம், கோட்டயத்தில், செய்தியாளர்களிடம் பேசிய உம்மன் சாண்டி, இந்தக் குற்றச்சாட்டு, முற்றிலும் அடிப்படையற்றதாகும். சரிதா நாயரிடம் நான் தந்தையைப் போல் நடந்து கொண்டதாக, அவரே ஊடகங்களிடம் கூறியுள்ளார். இந்நிலையில், இத்தகைய புகாரை தற்போது எழுப்பியுள்ளதன் பின்னணியில், தேர்தல் தொடர்புடைய சதி உள்ளது.
குற்றச்சாட்டு
மேலும், சூரிய மின்தகடு முறைகேடு தொடர்பாக நான் 14 மணி நேர வாக்குமூலம் அளித்தப்போது, குறுக்கு விசாரணை செய்த சரிதாவின் வக்கீல், இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு வார்த்தை கூட கூறவில்லை.
உண்மையில்லை
எனது அரசை களங்கப்படுத்த ஏற்கெனவே பலமுறை முயற்சிகள் நடந்துள்ளன. இந்தப் பாலியல் புகார், அத்தகைய சமீபத்திய முயற்சியாகும். இந்தக் குற்றச்சாட்டுகளில் ஒரு சதவீதம் கூட உண்மையிருக்கும் என்று மக்கள் நம்ப மாட்டார்கள். இதன் பின்னணியில் எதிர்கட்சிகள் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.