பெண் சீடரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு.. பெங்களூர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா ஆஜர்
மடத்தில் இருந்த பெண் சீடரை நித்தியானந்தா பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரின்பேரில் பெங்களூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜராகியுள்ளார்.
பெங்களூர்: பெங்களூரில் உள்ள மடத்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக
நித்தியானந்தா மீது பெண் சீடர் புகாரை தொடர்ந்து அவர் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த 2011-ம் ஆண்டு நித்தியானந்தா மீது அவரது முன்னாள் பக்தை ஆர்த்தி ராவ் ராம் நகர் மாவட்ட போலீஸில் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். இவ்வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு மைசூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
நித்தியானந்தா மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவாகியுள்ளதால் அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய முடிவெடுத்தனர். இதற்கு நித்தியானந்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிடக் கோரி ராம் நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் போலீஸார் மனு செய்தனர். இதனை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா மேல்முறையீடு செய்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம் நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டது. இதனிடையே, 'தனக்கு ஆண்மை பரிசோதனை நடத்த அனுமதிக்கக்கூடாது' என உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த வழக்கானது பெங்களூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நித்தியானந்தாவும் அவரது 7 சீடர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கை வரும் நவம்பர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.