ஏர்டெல்லைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோவின் விளம்பர தூதராக களம் இறங்கும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் !
டெல்லி: ரிலையன்ஸ் ஜியோவின் விளம்பர தூதராக பாலிவுட் நடிகர் ஷாருக்கானை அறிவித்துள்ளது அந்த நிறுவனம்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4ஜி தொலைத் தொடர்பு சேவையை முதன் முதலில் ரிலையன்ஸ் குழும ஊழியர்களுக்கு நாளை முதல் அறிமுகப்படுத்த உள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (ஆர்.ஐ.எல்.) தெரிவித்திருந்தது.
ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே 4ஜி இன்டர்நெட் சேவையை துவங்கி நாடு முழுவதும் வழங்கி வரும் நிலையில், நாளை முதல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதற்கட்டமாக தனது ஊழியர்களுக்கு இலவசமாக 4ஜி இன்டர்நெட் வசதியை வழங்குகிறது. எனினும், வரும் மார்ச்-ஏப்ரல் மாதம் முதலே வர்த்தக ரீதியில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையை துவங்குகிறது.
இந்நிலையில், இதற்கான விளம்பர தூதராக பாலிவுட் நடிகர் ஷாருக்கானை அறிவித்துள்ளது இந்த சேவை, ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனரான திருபாய் அம்பானியின் பிறந்த தினத்தை (டிச.28) முன்னிட்டு நாளை நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஷாருக்கான் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இதுகுறி்த்து ஷாருக்கான் கூறுகையில், ரிலையன்ஸ் ஜியோ 4ஜி வசதியானது இரண்டு முறை துவங்கி வைக்கப்படுகிறது. இன்னும் சில வேலைகள் முடிக்கப்படாமல் இருப்பதால் இப்படி செய்யவேண்டியதாயிற்று. இதற்கு நான் விளம்பர தூதராக அறிவிக்கப்பட்டுள்ளேன். முகேஷ் பாய் என்னிடம் இதுகுறித்து விளக்கினார். உண்மையில் அவரது பிள்ளைகளே இதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அவர்கள் 3 பேரும் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.
ரிலையன்ஸ் ஜியோ என்பது இந்தியாவில் மட்டும் புரட்சியை ஏற்படுத்தப் போவதில்லை. உலகம் முழுவதையும் மாற்றப் போகிறது. இவ்வாறு ஷாருக்கான் கூறினார். இதற்கு முன்னதாக ஷாருக்கான் ஏர்டெல் நிறுவனத்தின் விளம்பர தூதராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.