சகிப்பின்மை: அடிச்சாரு பாருய்யா ஷாருக்கான் அந்தர் பல்டி
மும்பை: இந்தியாவில் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவதாக நான் கூறவே இல்லை என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அந்தர் பல்டி அடித்துள்ளார்.
நாட்டில் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவது குறித்து கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகர் ஆமீர் கான் பெரும் பிரச்சனையில் சிக்கியுள்ளார். பல்வேறு நகரங்களில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரது கன்னத்தில் அறைபவருக்கு ரூ. 1 லட்சம் பரிசு அறிவித்துள்ளது சிவசேனா.
இந்நிலையில் ஷாருக்கான் சகிப்புத்தன்மையின்மை பற்றி பேசியுள்ளார்.
இந்தியா
இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லை என்று நான் கூறவே இல்லை. அது பற்றி செய்தியாளர்கள் என்னிடம் முன்பு கேட்டபோது பதில் அளிக்க மறுத்தேன். அவர்கள் வற்புறுத்தியதால், இந்த நாட்டை மதச்சார்பற்ற நாடாக ஆக்க வாலிபர்கள் அக்கறை செலுத்த வேண்டும் என்றேன் என்றார் ஷாருக்.
திரித்துவிடுவார்கள்
எப்பொழுது பார்த்தாலும் நான் ஒன்று கூறுவேன். ஆனால் அதை திரித்து மக்கள் வேறு ஏதாவது கூறுவார்கள். இதனால் நான் தான் பிரச்சனையில் சிக்குவேன் என்று ஷாருக் தெரிவித்தார்.
சகிப்புத்தன்மை
நாட்டில் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இது மிகப்பெரிய பிரச்சனையாகும் என்று ஷாருக்கான் கடந்த 2ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் கூறினார்.
பாகிஸ்தான் ஏஜெண்ட்
ஷாருக்கான் சகிப்புத்தன்மையின்மை பற்றி பேசியதும் அவரை பாஜகவினர் பாகிஸ்தான் ஏஜெண்ட், அவர் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்றெல்லாம் விமர்சித்தார்கள். இந்நிலையில் தான் அவர் சகிப்புத்தன்மையின்மை பற்றி பேசவே இல்லை என்று பல்டி அடித்துள்ளார்.
விருதுகள்
நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை என்று கூறி விருதுகளை திருப்பிக் கொடுப்பவர்களின் முடிவை மதிக்கிறேன். ஆனால் அதற்காக நானும் அப்படி செய்ய வேண்டியது இல்லை என்று ஷாருக் முன்பு தெரிவித்தார் என்பது குறுப்பிடத்தக்கது.