சி.ஏ.ஏ.வை வாபஸ் பெற கோரி அமித்ஷா வீடு நோக்கி ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் பேரணி நடத்த முயற்சி
Recommended Video
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை (சி.ஏ.ஏ.) திரும்பப் பெற கோரி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீடு நோக்கி ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் இன்று பேரணி நடத்த முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சி.ஏ.ஏ.வை வாபஸ் பெற கோரி டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் 2 மாத காலமாக போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்போராட்டக்காரர்களை மையமாக வைத்து டெல்லி சட்டசபை தேர்தலும் நடைபெற்றது.
ஷாகீன் பாக்கில் போராட்டம் நடத்துவோரை சுட்டுத் தள்ள வேண்டும் என்றும் பாஜக தலைவர்கள் பேசினர். இதனையடுத்து ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராடுகிறவர்கள் தேசவிரோதிகள் அல்ல என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனிடையே டெல்லி ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள், சி.ஏ.ஏ.வை திரும்ப பெற வலியுறுத்தி இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீடு நோக்கி பேரணியாக சென்றனர்.
Delhi: Protesters begin march from Shaheen Bagh towards Home Minister Amit Shah's residence https://t.co/VfPSVJ52pu pic.twitter.com/TmCf4BkiXS
— ANI (@ANI) February 16, 2020
ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இது தொடர்பாக டெல்லி போலீசார், போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து போலீசாரின் அனுமதி கிடைக்கும் வரை ஷாகீன் பாக்கிலேயே தொடருவது என்றும் அதன்பின்னரே அமித்ஷாவின் வீடு நோக்கி பேரணியாக செல்வது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. இதனால் பதற்றம் தணிந்தது.