வெள்ள நிவாரணம்... நடிகர் ஷாரூக்கான் ரூ 1 கோடி அறிவிப்பு
மும்பை: சென்னை வெள்ள நிவாரணத்துக்காக ரூ 1 கோடியைத் தருவதாக நடிகர் ஷாரூக்கான் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "சென்னை மாநகரம் சமீபத்திய புயல் மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து வேதனை அடைகிறேன்.
அதே நேரம், இந்த சோதனையும் துயரமும் மிக்க தருணத்தில் சென்னை மக்களின் அமைதியும், ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு கடுமையான சூழலிருந்து மேலெழுந்து வரும் பாங்கும் எங்களை பெருமைப்பட வைக்கிறது.
இந்தத் துயரிலிருந்து மக்களைக் காக்க உங்கள் அரசும் பிறரும் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பாராட்டுகிறோம்.
சென்னை மக்களின் துயர் துடைக்க எங்கள் ரெட் சில்லி நிறுவனம் மற்றும் தில்வாலே படக்குழுவின் சார்பாக ரூ 1 கோடியை வழங்குகிறோம். தயவு செய்து இந்தத் தொகையை ஏற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய நடிகர்களில் இதுவரை யாரும் வழங்காத பெரும் தொகையை ஷாரூக்கான் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.