ஷாருக் நாடு திரும்பியிருந்தால் அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது போன்றிருக்கும்: சிவசேனா
மும்பை: விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியதும் நடிகர் ஷாருக்கான் நாடு திரும்பியிருந்தால் அது அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது போன்று இருந்திருக்கும் என்று சிவ சேனா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா சென்ற பாலிவுட் நடிகர் ஷாருக்கான் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் குடியேற்றத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் பெயரில் கான் இருப்பதால் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் இந்த செயலுக்காக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் இது குறித்து சிவசேனாவின் நாளிதழான சாம்னாவில் கூறியிருப்பதாவது,
ஷாருக்கான்
அமெரிக்காவில் உள்ள பெரிய விமான நிலையங்களில் எல்லாம் ஷாருக்கானுக்கு இதே கதி தான். அப்படி இருந்தும் ஷாருக் அவமானப்படவே மீண்டும் மீண்டும் அமெரிக்கா சென்று கொண்டிருக்கிறார்.
அமெரிக்கா
விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியதுமே இது போன்றே தொடர்ந்து என்னை அவமதித்தால் இனி உங்கள் நாட்டில் கால் வைக்க மாட்டேன் என்று கூறி ஷாருக்கான் இந்தியாவுக்கு திரும்பி வந்திருக்க வேண்டும்.
அறை
ஷாருக்கான் மட்டும் இந்தியாவுக்கு திரும்பி வந்திருந்தால் அது அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது போன்று இருந்திருக்கும். அனைத்து இஸ்லாமியர்களையும் அமெரிக்கா தீவிரவாதிகளாக பார்க்கிறது.
கான்கள்
பாலிவுட்டின் ஷாருக்கான், சல்மான் கான், ஆமீர் கான் ஆகியோர் காஷ்மீரில் வழி தவறி செயல்படும் இளைஞர்களுக்கு ட்விட்டர் மூலம் நல்வழி காட்ட வேண்டும் என்று சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.