ஊருக்குத்தான் "ஸ்வச்ச பாரதம்".. கங்கையில் "உச்சா" போன பாஜக தலைவர்...!
அலகாபாத்: பாஜக தலைவர் ஒருவர் கங்கையில் சிறுநீர் கழிப்பது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
வரும் 2019ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. எனவே, அதற்குள்ளாக மகாத்மாவின் கனவுத் திட்டங்களில் ஒன்றான தூய்மை இந்தியாவை நினைவாக்க மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2014ம் ஆண்டு மகாத்மாவின் பிறந்தநாளன்று இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவை தூய்மையானதாக மாற்ற, மக்கள் திட்டமாக மாற்றி இதனை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு கட்டமாக புனித நதிகளுள் ஒன்றான கங்கையை தூய்மைப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கென பெரும் தொகையையும் ஒதுக்கப் பட்டுள்ளது. கங்கையில் எச்சில் துப்பக்கூடாது, கழிவுகளைக் கொட்டக் கூடாது என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வேலியே பயிரை மேய்ந்த கதையாக, சுத்தம் சுகாதாரம் எனப் பேசும் பாஜக தலைவர் ஒருவரே கங்கையை அசுத்தப்படுத்தியுள்ளார். உத்திரப்பிரதேசத்தில் கழிப்பறையின் முக்கியத்துவம் குறித்துப் பேசிவிட்டு வந்த சிறிது நேரத்திலேயே, விஜய் பகதூர் பதக் என்ற பாஜக தலைவர் கங்கையில் சிறுநீர் கழித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி, பாஜகவிற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.