சாய்பாபாவின் பக்தர் என்பதா? உமாபாரதி மன்னிப்பு கேட்க துவாரகை சங்கராச்சாரியார் வலியுறுத்தல்
மத்திய அமைச்சர் உமாபாரதி அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசுகையில் தம்மை சாய்பாபா பக்தர் என்று கூறியிருந்தார். இதற்கு துவாரகை பீட சங்கராச்சாரியார் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து சங்கராச்சாரியாருக்கு எதிராக சாய்பாபா பக்தர்கள் கொந்தளித்து வருகின்றனர். ஆனால் சங்கராச்சாரியாருக்கு நிர்வாண சாமியார்களான நாகா சாதுக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் உமாபாரதி தன்னை சாய்பாபா பக்தர் என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று துவாரகை சங்கராச்சாரியார் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், முஸ்லிமான சாய்பாபாவை வழிபடுகிறேன் என்கிறார் உமாபாரதி. அதனால்தான் அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்ட முடியாமல் இருகிறது.
முஸ்லிமான சாய்பாபாவை எப்படி இந்து கடவுளின் அவதாரமாக ஏற்க முடியும்? இந்துக்களிடையே பிளவை ஏற்படுத்தவே அன்னிய சக்திகள் இத்தகைய புதிய வழிபாட்டு முறைகளை உருவாக்கி விடுகின்றன. இந்த விவகாரத்தில் உமாபாரதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
ஆனால் தாம் இந்த விவகாரத்தில் வருத்தம் எதையும் தெரிவிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் உமாபாரதி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.