கோபிநாத் முண்டே மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவை: பிரதமர் மோடிக்கு சரத்பவார் கடிதம்
டெல்லி: மத்திய அமைச்சராக இருந்த கோபிநாத் முண்டே மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடிதம் அனுப்பியுள்ளார்.
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்து வந்த கோபிநாத் முண்டே, கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். ஆனால் சதியால் இந்த விபத்து நடந்துள்ளதா என்ற கேள்வி வலுத்து வருகிறது.
கோபிநாத் முண்டே மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என மகாராஷ்டிரா மாநில பாரதிய ஜனதா தலைவர் தேவேந்திர பத்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, இந்திய குடியரசு கட்சித்தலைவர் அத்வாலே உள்ளிட்ட தலைவர்கள் கோரியுள்ளனர்.
இந்தக் கோரிக்கைக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர், இந்த விபத்து குறித்து மகாராஷ்டிரா மாநில பாரதிய ஜனதா தலைவர் தேவேந்திர பத்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் சி.பி.ஐ. விசாரணை கேட்டுள்ளனர். இதை பரிசீலித்து, அரசு ஏற்க வேண்டும் என்பதுதான் என் கருத்தும் ஆகும். அதுதான் உண்மைகளை வெளியே கொண்டு வரும் என்று கூறியுள்ளார்.