ராகுலும், பிருத்விராஜ் சவானும் தான் காங், தேசியவாத காங். பிளவுக்குக் காரணம் - பவார் குற்றச்சாட்டு
மும்பை: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவானும்தான் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையிலான கூட்டணி முறிய காரணம் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த 15 ஆண்டு காலமாக இருந்து வந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சமீபத்தில் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் முறிந்து போனது.
இந்த நிலையில் இரு கட்சியினரும் பிரிவுக்கு யார் காரணம் என்பது குறித்து பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ராகுல் தான் காரணம்...
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ராகுல் காந்தியைக் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், நாங்கள் நீண்ட காலமாகவே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ராகுல் காந்தியும், அவரது கோஷ்டியும் கூட்டணிக் கட்சிகளை மட்டம் தட்டுவதும், ஓரம் கட்டுவதுமாக உள்ளனர்.
நாங்களும் காங்கிரஸ்காரர்கள் தான்...
நாங்களும் அதே காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்தவர்கள்தான் என்பதை அவர் மறந்து விட்டார். எனவே அவரது செயல்பாடுகள் அவர் கட்சிக்கு வந்தது முதலே எங்களுக்கு நன்றாக தெரிகிறது.
வதந்தி...
தேசியவாத காங்கிரஸுக்கு எதிராக மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் வதந்தி பரப்பி வந்தார். விலாஸ்ராவ் தேஷ்முக், சுஷில் குமார் ஷிண்டே, அசோக் சவான் ஆகியோர் முதல்வராக இருந்தபோது எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை.
பழி வாங்கி விட்டார்...
ஆனால் பிருத்வராஜ் சவான் எங்களைப் பழிவாங்கி வருகிறார். லோக்சபாதேர்தலில் 1999ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் வேட்பாளரிடம் தோற்றுப் போனதை மனதில் வைத்து இப்படிச் செயல்படுகிறார் அவர்.
அவமதிப்பின் விலை...
கூட்டணிக் கட்சியினரை அவமதித்த காங்கிரஸ் கட்சி அதற்கான விலையைக் கொடுத்துள்ளது.
அஜீத் பவாரின் ஆசை...
வரும் சட்டசபைத் தேர்தலில் எனது உறவினர் அஜீத் பவாரை முதல்வர் வேட்பாளராக நாங்கள் அறிவிக்கவில்லை. அனைவரும் இணைந்தே தேர்தலை சந்திக்கிறோம். அதேசமயம், அஜீத் பவார் ஆசைப்பட்டால் அதில் தவறும் இல்லை.
மோடி அலை இல்லை...
மோடி அலை இனியும் கிடையாது. மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் அது செல்லாது. அது எடுபடாது. அது ஓயத் தொடங்கி விட்டது. அதை இடைத் தேர்தலில் நாம் பார்த்தோம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முறிந்த கூட்டணி....
மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் இந்த இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக பெரும் பிரச்சினை வெடித்தது. இறுதியில் கூட்டணி உடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.