'தென்னிந்திய' பெண்கள் கருப்பா இருந்தாலும் களையாக இருப்பாங்க: 'வடக்கத்தி' சரத் யாதவின் வம்பு பேச்சு!
டெல்லி: தென்னிந்திய பெண்கள் கருப்பாக இருந்தாலும் அழகானவர்கள் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ் தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதேநேரத்தில் தம்முடைய பேச்சுக்கு ஒருபோதும் மன்னிப்பு கேட்க முடியது என்றும் சரத் யாதவ் கூறியிருக்கிறார்.
ராஜ்ய்சபாவில் இன்சூரன்ஸ் மசோதா குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ் பேசியதாவது:
இந்திய ஆண்கள் கருப்பாக உள்ளதால் பெண்கள் வெள்ளையாக இருப்பது அவர்களுக்கு பிடிக்கிறது. அதனால்தான் மணமகள் தேவை விளம்பரத்திலும் நல்ல நிறமான மணமகளையே எதிர்பார்கின்றனர்.
ஆனால், தென்னிந்திய பெண்கள் கருப்பானவர்களாக இருந்தாலும், அழகானவர்கள், சிறந்த உடல்கட்டை பெற்றவர்கள். நன்றாக நடனம் ஆடுவார்கள்..
நிர்பயா ஆவணப்படம் எடுத்த, லெஸ்லி உட்வின்கூட வெள்ளைத் தோல் நிறத்தைக் கொண்டவராக இருந்ததால்தான் அவருக்கு சிறையில் ஆவணப்படம் எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இங்கு அழகான பெண்களுக்குத்தான் அனைத்து வாய்ப்புகளும் கொடுக்கப்படுகின்றன.
இவ்வாறு சரத்யாதவ் பேசினார்.
கடந்த 2012ஆம் ஆண்டு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதைப் பெற்றவரான சரத் யாதவின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தி.மு.க. எம்.பி. கனிமொழி, சரத்யாதவின் பேச்சை, தென்னிந்தியப் பெண்களைப் பற்றியதாக மட்டுமே கருதக் கூடாது. அது பொதுப்படையாக பெண்களை விமர்சிக்கும் பேச்சு. பெண்கள் நுகர்பொருள் கிடையாது.
பெண்களை நிறத்தின் அடிப்படையில் வர்ணிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. சரத் யாதவ் போன்ற மிக மூத்த தலைவரிடம் இருந்து இக்கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத்தும் சரத்யாதவுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.
இதனிடையே சரத் யாதவின் கருத்து யாரையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் கே.சி. தியாகி கூறினார்.
ஆனால், நான் தவறான எக்கருத்தையும் வெளியிடவில்லை. யதார்த்த நிலையைத்தான் வெளிப்படுத்தினேன். அதனால், மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்கிறார் சரத் யாதவ்.
இன்சூரன்ஸ் மசோதாவுக்கும் இடுப்பழகுக்கும் என்ன சம்பந்தமோ?