'நீங்க எப்படிப்பட்ட பெண் என்பது எனக்கு தெரியும்': ஸ்மிரிதி இரானி மீதான விமர்சனம்- சரத்யாதவ் வருத்தம்
டெல்லி: மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி குறித்து கூறிய கருத்துக்கு ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் ராஜ்யசபாவில் வருத்தம் தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் கடந்த வாரம் பேசிய ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ், தென்னிந்திய பெண்கள் கருப்பாக இருந்தாலும் அழகானவர்கள். நாட்டிய திறமை கொண்டவர்கள். அவர்கள் சிவந்த நிறமாக படைக்கப்படவில்லை என்றார்.
இதற்கு மத்திய மனித வளமேம்பாட்டு அமைச்சர் ஸ்மிரிதி இரானி, தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஸ்மிரிதி இரானி பேசுகையில், பெண்களின் மேனி நிறம் குறித்து இப்படி பேசவேண்டாம். அது தவறான தகவலை தெரிவிப்பதாக அமைந்துவிடும் என்று சரத்யாதவை கேட்டுக்கொண்டார்.
உடனே சரத்யாதவ் "நீங்கள் எப்படிப்பட்ட பெண் என்பது எனக்கு தெரியும்" என்று ஸ்மிரிதி இரானியை பார்த்து கோபத்துடன் கேட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில் தென்னிந்திய பெண்கள் பற்றி சரத்யாதவ் தெரிவித்த கருத்துகள் சபைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.
இருப்பினும் ஸ்மிரிதி இரானி பற்றி கடைசியாக சரத்யாதவ் கூறிய வார்த்தைகள் சர்ச்சைக்குரியதாக அமைந்தது.
இந்த பிரச்சினையை ராஜ்யசபையில் நேற்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி எழுப்பினார். அவர் சரத்யாதவிடம் கூறுகையில், 2 நாட்களுக்கு முன்பு நீங்கள் ஸ்மிதிரி இரானியிடம் எப்படிப்பட்ட பெண் என்பது எனக்கு தெரியும் என்று கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இது தவறான எண்ணத்தை வெளிப்படுத்துவதாக அமைந்து இருக்கிறது. நாடு முழுவதிலும் இது சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே உங்களுடைய பேச்சு பற்றி விளக்கம் அளித்து இப்பிரச்சினைக்கு நீங்கள் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து ஸ்மிரிதி இரானி பற்றி தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக சரத்யாதவ் கூறினார்.
மேலும், ஸ்மிரிதி இரானி பற்றி தெரிவித்த கருத்துக்கு நான் வருந்துகிறேன். அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்து இருக்கிறேன் என்றார்.