நான்கு பேருக்கு ஒரு ஸ்ட்ரெட்சர்.. அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு நடந்த அவலம்
அரசு மருத்துவமனையில் நிறை மாத கர்ப்பிணிப் பெண்கள் நான்கு பேர் ஒரே ஸ்டெச்சரில் அமர வைத்து கொண்டு சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.
ஹூப்ளி: கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் நான்கு கர்ப்பிணிப் பெண்களை ஒரே ஸ்ட்ரெட்சரில் அமர வைத்து கொண்டுசென்றது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று காலை கர்ப்பிணிப் பெண்கள் சிலர் தங்களது வழக்கமான பரிசோதனையை மேற்கொள்வதற்காக மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.
அப்போது, மருத்துவமனையின் ஒரு பகுதியில் இருந்து ஸ்கேன் எடுப்பதற்கான மற்றொரு பகுதிக்கு நான்கு நிறை மாத கர்ப்பிணிப் பெண்களை ஒரே ஸ்டெச்சரில் அமர வைத்து மருத்துவமனை ஊழியர்கள் அழைத்துச் சென்றனர்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அரசு மருத்துவமனையில் பொறுப்பற்ற முறையில் நடைபெறும் அவல நிலை குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுபற்றி தகவல் அறிந்த மாநில மகளிர் ஆணையம் அரசு மருத்துவனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன் அடிப்படையில் மருத்துவமனை நிர்வாகம் மூன்று செவிலியர்களை பணி இடைநீக்கம் செய்துள்ளது.