பழம்பெரும் இந்தி நடிகை ஷர்மிளா தாகூர் வாகா எல்லை வழியாக இந்தியா திரும்ப பாக். அதிகாரிகள் அனுமதி
அமிர்தசரஸ்: பாகிஸ்தான் சென்ற பழம்பெரும் இந்தி நடிகை ஷர்மிளா தாகூர் இன்று வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு திரும்ப பாகிஸ்தான் அதிகாரிகள் அனுமதி அளித்தனர். முன்னதாக நேற்று 'போலீஸ் அறிக்கை' இல்லாததால் அவரை வாகா எல்லை வழியாக பயணிக்க பாகிஸ்தான் அதிகாரிகள் அனுமதிக்க மறுத்திருந்தனர்.
71 வயதாகும் பழம்பெரும் இந்தி நடிகை ஷர்மிளா தாகூர் இலக்கிய விழாவில் பங்கேற்க 4 நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றார். பின் தன்னுடைய பயணத்தை முடித்துக்கொண்டு லாகூரில் இருந்து நேற்று வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு ஷர்மிளா திரும்ப முயன்றார். அப்போது அவரை பாகிஸ்தான் குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
பாகிஸ்தானில் ஷர்மிளா தங்கி இருந்ததற்கான போலீஸ் அறிக்கை இல்லாததால் அவர் வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு திரும்ப அனுமதி மறுக்கப்பட்டது. உடனே லாகூர் போலீசாரை ஷர்மிளா தொடர்பு கொண்டு பேசினார். அடுத்த 2 மணி நேரத்தில் அவருக்கு போலீஸ் அறிக்கை கிடைத்தது.
அதுவரை வாகா எல்லையில் உள்ள விருந்தினர் அறையில் தங்கி இருந்த ஷர்மிளா, பின்னர் மீண்டும் லாகூருக்கே திரும்பினார். லாகூரில் தங்கி இருந்த போது அவரை பிரதமர் நவாஸ் ஷெரீப் நேற்று முன்தினம் அழைத்து தன்னுடைய குடும்பத்துடன் விருந்து அளித்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று உரிய போலீஸ் அறிக்கையுடன் வாகா எல்லை வழியாக இந்தியா திரும்ப பாகிஸ்தான் குடியுரிமை அதிகாரிகள் அனுமதித்தனர்.