ஓரினச்சேர்க்கை சட்டத்தில் திருத்தம் கோரி சசிதரூர் கொண்டு வந்த தனிநபர் மசோதா தோல்வி
டெல்லி: ஓரினச்சேர்க்கை குறித்த இந்திய குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கோரி காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் கொண்டு வந்த தனிநபர் மசோதா, மக்களவையில் உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவு 'இயற்கைக்கு மாறான பாலுறவு' கொள்வதை தண்டனைக்குரிய குற்றமாக்குகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு இச்சட்டம் குறித்து விசாரணை நடத்திய டெல்லி உயர் நீதிமன்றம், ஒப்புதலோடு உடலுறவு கொள்ளும் 18 வயதுக்கும் அதிகமானவர்களுக்குப் பொருந்தாது என்று அறிவித்தது. மேலும். இது அரசியல் சாசனத்துக்கு முரணானது என்றும் அறிவித்தது.
டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம், 377-வது பிரிவை திருத்துவது குறித்து மாற்றம் செய்வது குறித்தோ அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என 2013ல் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் 377-வது பிரிவில் திருத்தம் செய்ய வலியுறுத்தி திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினர் சசி தரூர், நேற்று தனிநபர் மசோதா கொண்டு வந்தார். அதில் ஓரினச்சேர்க்கையை தண்டனைக்குரிய சட்டத்திலிருந்து நீக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பாஜக உறுப்பினர் நிஷிகந்த் துபே எதிர்ப்பு தெரிவித்தார். புராணங்கள், இதிகாசங்களை மேற்கோள்காட்டி நான் எதிர்க்கவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பைதான் சுட்டி காட்டுகிறேன் என்றார். இதற்கு பதிலளித்த தரூர், துபே உச்ச நீதிமன்ற தீர்ப்பின் ஒரு பகுதியைத்தான் சுட்டிக் காட்டுகிறார் என்றார்.
நிலைமை பெரிய விவகாரமாக மாறிய நிலையில், தலைவர் இருக்கையில் இருந்த துணைத் தலைவர் தம்பித்துரை, மசோதாவை வாக்கெடுப்புக்கு அனுப்பினார். மசோதாவுக்கு எதிராக 71 வாக்குகளும், ஆதரவாக 24 வாக்குகளும் கிடைத்தன. ஒருவர் வாக்களிக்கவில்லை. இதையடுத்து தரூரின் மசோதா அறிமுக நிலையிலேயே தோற்கடிக்கப்பட்டது.மசோதாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்தது பற்றி கருத்து தெரிவித்த சசிதரூர், உறுப்பினர்களின் சபிப்பின்மை என்னை ஆச்சிரியப்பட வைக்கிறது என தெரிவித்தார்.