சுனந்தா புஷ்கர் மரண வழக்கில், சசி தரூருக்கு ஜாமீன்.. முன் ஜாமீன் மாற்றப்பட்டது
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர்களில் ஒருவருமான, சசி தரூருக்கு, மனைவி சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த வழக்கில் தரூருக்கு செஷன்ஸ் கோர்ட்டில் முன் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், அவரின் முன் ஜாமீனை, ஜாமீனாக மாற்றம் செய்துள்ளது டெல்லி பட்டியாலா நீதிமன்றம்.
ஜாமீனுக்குத் தேவையான 1 லட்ச ரூபாய் பிணையத்தை சசி தரூர் இன்று செலுத்தினார். இதற்காக அவர் கோர்ட்டில் நேரில் ஆஜராகியிருந்தார். இதையடுத்து, வெளிநாட்டுக்கு செல்ல கூடாது என்ற நிபந்தனையுடன் சசி தரூருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சுனந்தா புஷ்கர் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதற்கு சில நாட்களுக்கு முன், பாகிஸ்தானிய பத்திரிகையாளருடன் தொடர்பு வைத்திருப்பதாக சமூக ஊடகங்களில் அவரது கணவர் சசி தரூர் மீது குற்றம் சாட்டியிருந்தார் என்பதால் சசி தரூர் மீது விசாரணை அமைப்புகளின் சந்தேக கண் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.