'சில்ல(ரை)ர்' கூட உலக அழகியாகிவிட்டதே!... டுவிட்டரில் சசிதரூர் பதிவிட்ட கருத்தால் சர்ச்சை!
பணமதிப்பிழப்பு விவகாரத்தை கேலி செய்யும் விதமாக சில்லர் கூட உலகஅழகியாகிவிட்டதே என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் டுவிட்டரில் பதிவிட்டிருந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
டெல்லி : பாஜகவின் பணமதிப்பிழப்பு விவகாரத்தை கிண்டல் செய்யும் விதமாக உலக அழகி சில்லரின் பெயரை குறிப்பிட்டு காங்கிரஸ் எம்பி சசிதரூர் கேலி செய்யும் வகையிலான கருத்தை பதிவிட்டு அதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் திருவனந்தபுரம் லோக்சபா உறுப்பினருமான சசிதரூர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ள மனுஷி சில்லரை ஒப்பிட்டு பதிவிட்டிருந்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாஜகவின் பணமதிப்பிழப்பு விவகாரத்தால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததை குறிப்பிடும் வகையில் அவர் அந்தப் பதிவை போட்டிருந்தார்.
அதில் பணமதிப்பிழக்க நாணயம் என்ன தவறு செய்தது. ஆனால் தற்போது இந்திய சில்லரை உலக அரங்கிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ளதை பாஜக உணர்ந்திருக்கும். பாருங்கள் நம்முடைய சில்லர் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று கேலியாக டுவீட்டியுள்ளார். இதில் உலக அழகி மனுஷியை அவரின் குடும்பப் பெயரான சில்லர் என்பதை சில்லரை எனக் குறிப்பிட்டு சசிதரூர் கிண்டல் செய்திருந்தார்.
சர்ச்சை கருத்தால் எதிர்ப்பு
இதற்கு பலரும் எதிர்கருத்தை தெரித்தனர். பெண்கள் குறித்து சசிதரூரின் பார்வை இந்த அளவிற்குத் தான் இருக்கிறது என்று டுவிட்டரில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. சில்லர் என்ற அவரின் குடும்பப் பெயரை இப்படி தவறாக சித்தரித்து கேலி செய்ததற்கு சசி தரூர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கொந்தளித்தனர் நெட்டிசன்கள்.
சசிதரூருக்கு கண்டனம்
சசிதரூரின் டுவீட்டுக்கு தேசிய பெண்கள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "நாட்டுக்கு பெருமை சேர்த்த ஒரு பெண்ணின் சாதனையை சசிதரூர் சிறுமைப்படுத்தி விட்டார். தனது சொந்த மகளை அவர் சில்லரை என்று சொல்வாரா? அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அவருக்கு ‘சம்மன்' அனுப்பி நாங்கள் விசாரிப்போம்" என்று தேசிய பெண்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
|
மன்னிப்பு கேட்ட சசிதரூர்
இதனையடுத்து தான் தவறான நோக்கத்தில் எதையும் சொல்லவில்லை என்றும், நகைச்சுவைக்காக மட்டுமே அப்படி சொன்னதாகவும் சசி தரூர் மன்னிப்பு கேட்டிருந்தார். தன்னுடைய பழைய டுவீட்டை டெலிட் செய்யாத அவர் குற்றம் சாட்டும் நோக்கில் மனுஷி பற்றி எதையும் சொல்லவில்லை என்றும் அனைவரும் 'சில்'லாக இருங்கள் என்றும் சசிதரூர் இரண்டாவது டுவீட் போட்டுள்ளார்.
|
பாராட்டியிருக்கிறேன்
இளம் பெண் மனுஷி சில்லரின் செயலை தான் பாராட்டி இருப்பதாக சசி தரூர் கூறியுள்ளார். மேலும் அவரை இழிவுபடுத்துவது தன்னுடைய நோக்கம் அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.