முஸ்லீமை மணந்த பெண் இந்து கிடையாது: இறுதிச் சடங்கு செய்ய அனுமதி மறுத்த கோவில்
Recommended Video
டெல்லி: டெல்லி கோவிலில் இந்து மதத்தை சேர்ந்த தனது மனைவிக்கு இறுதிச் சடங்கு செய்ய முயன்ற இஸ்லாமிய கணவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் இம்தியாசுர் ரஹ்மான். அவரின் மனைவி நிவேதிதா கடக். அவர்களின் மகள் இஹினி அம்ரீன். இந்து மதத்தை சேர்ந்த நிவேதிதா இம்தியாசுர் ரஹ்மானை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
20 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் நிவேதிதா உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உயிர் இழந்தார். டெல்லியில் உள்ள நிகம் போத் கட் பகுதியில் இந்து முறைப்படி அவரது இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது.
இதையடுத்து இந்து முறைப்படி இறந்தவர்களுக்கு செய்யப்படும் ஷ்ரத் என்கிற சடங்குகளை செய்ய ரஹ்மான் பெங்காளிகள் அதிகம் வசிக்கும் சித்தரஞ்சன் பார்க் பகுதியில் உள்ள காளி கோவிலில் ரூ. 1,300 பணம் செலுத்தினார். அவர் தனது மகள் இஹினியின் பெயரில் முன்பதிவு செய்தார்.
அவரின் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது. இது குறித்து கோவில் நிர்வாக தலைவர் அஷிதவா பவ்மிக் கூறுகையில்,
ரஹ்மான் தான் ஒரு முஸ்லீம் என்பதை மறைத்து தனது மகள் இஹினியின் பெயரில் முன்பதிவு செய்தார். சந்தேகப்பட்டு அவரின் குலம், கோத்ரத்தை கேட்டபோது அவரிடம் இருந்து பதிலே இல்லை. இஸ்லாமியர்களுக்கு கோத்ர முறை கிடையாது. இஸ்லாமியரை மணந்த ஒரு பெண்ணை இந்துவாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் திருமணத்திற்கு பிறகு அந்த பெண் தனது கணவரின் பெயர், மத நம்பிக்கையை ஏற்று அந்த சமூகத்தில் ஒரு ஆளாகிவிடுகிறார்.
இந்து சடங்குகள், பழக்க வழக்கங்களுக்கு மதிப்பு கொடுத்தே ரஹ்மானின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. யார் கண்டது, ரஹ்மான் உள்நோக்கத்துடன் செயல்பட்டு தன்னுடன் 50-100 உறவினர்களை அழைத்து வந்து கோவிலுக்குள் தொழுகை நடத்தலாம். அப்படி செய்தால் நாங்கள் என்ன செய்வது? அதை அனுமதிக்க முடியுமா?
அது ஏன் டெல்லி கோவிலில் தான் சடங்குகளை செய்ய வேண்டுமா? அவரின் சொந்த ஊரான கொல்கத்தாவில் செய்ய வேண்டியது தானே என்றார்.