எந்தரோ மாகானுபாவலு... மூளை ஆபரேஷனின் போது பாட்டுப் பாடி அசத்திய பெண் நோயாளி... பெங்களூருவில்!
பெங்களூரு: பெங்களூருவில் மூளைப் பகுதியில் நடந்த ஆபரேஷனின் போது, நோயாளி ஒருவர் மூன்றரை மணி நேரம் பாடியும், பேசியும் ஆச்சர்யப் படுத்தியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் புர்த்வானைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் சமீபகாலமாக கடும் தலைவலி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகளால் அவதிப் பட்டு வந்தார். இது தொடர்பாக பெங்களூரு சீதா படேஜா மருத்துவமனை மருத்துவர்கள் அவரைச் சோதனை செய்து பார்த்த போது, அவரது மூளையில் ஆபரேஷன் ஒன்று செய்ய வேண்டி இருந்தது தெரிய வந்தது.
மிகவும் சிக்கலான அந்த ஆபரேஷனால் நோயாளியின் பேச்சுத் திறன் பறி போகும் அபாயம் இருந்தது. எனவே, நோயாளியை பேசியபடியே இருக்கச் செய்து அந்த ஆபரேஷனை செய்வது என மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, வலி மரத்துப் போகும் ஊசியை மட்டும் போட்டு, அப்பெண்ணிற்கு தலையில் மூளைப் பகுதியில் ஆபரேஷன் நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் வாரத்தில் எத்தனை நாட்கள் உள்ளன. இது என்ன படம், உங்களுக்குப் பிடித்த மியூசிக் என்ன என்பது குறித்து தொடர்ந்து டாக்டர்கள் பேசியபடி இருந்தனர். அவரும் பதிலளித்து வந்தார். மேலும் தனக்குப் பிடித்த ரபீந்திரா சங்கீதத்தைப் பாடியபடியும் இருந்தார்.
சுமார் மூன்றரை மணி நேரம் நடந்த இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. இந்த ஆபரேஷனுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் செலவானதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் அப்பெண் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என மருத்துவர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
இம்மாத துவக்கத்தில் இதேபோல் பிரேசிலில் நடந்த மூளை ஆபரேஷன் நோயாளி கிடார் வாசித்து டாக்டர்களுக்கு ஒத்துழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.