இந்திராணியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை கோர்ட் உத்தரவு
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜி, அவரது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா மற்றும் முன்னாள் டிரைவர் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். இதையடுத்து மும்பை போலீசார் அந்த 3 பேரையும் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். முதலில் கடந்த 5ம் தேதியுடன் அவர்களுடைய காவல் முடிந்தது.
இதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலை இன்று வரை நீட்டித்தனர். இந்நிலையில் இன்றுடன் காவல் முடிந்ததையடுத்து போலீசார் இந்திராணியை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் இந்திராணியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. போலீசார் கன்னா மற்றும் ராயை கொலை விசாரணை தொடர்பாக கொல்கத்தா அழைத்துச் சென்றுள்ளதால் அவர்களை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தவில்லை.
முன்னதாக போலீசார் நேற்று இந்திராணியை மும்பையில் இருக்கும் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இந்நிலையில் போலீசார் இந்திராணியின் தற்போதைய கணவர் பீட்டர் முகர்ஜியிடம் மூன்றாவது முறையாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்திராணி தனது முதல் கணவருக்கு பிறந்த ஷீனாவை கொலை செய்துவிட்டு விசாரணையில் ஒத்துழைக்காமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.