ஷீனா கொலையில் ஷாக் திருப்பம்.. பீட்டர் முகர்ஜிக்கும் தொடர்பு... சிபிஐ குற்றப்பத்திரிக்கை
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணியின் மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜி மீது கொலை, சாட்சியங்களை அழித்தது, கொலைக்கு திட்டமிட்டது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் சிஇஓவான பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜி தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கடந்த 2012ம் ஆண்டு கொலை செய்தார்.
இந்த வழக்கில் இந்திராணி, அவரின் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா மற்றும் முன்னாள் கார் டிரைவர் ராய் ஆகியோர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர்.
ஷீனா கொலை வழக்கில் பீட்டருக்கும் பங்கு இருப்பது குறித்து தெரிய வந்த பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி மும்பை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.
சிபிஐ பீட்டர் முகர்ஜி மீது மும்பை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது,
பீட்டர் ஷீனா போராவை கொல்ல இந்திராணிக்கு உதவி செய்துள்ளார். ஷீனா தனது மகன் ராகுலை காதலித்தது பீட்டருக்கு பிடிக்கவில்லலை. இந்திராணிக்கோ தனது முதல் கணவர் மூலம் பிறந்த ஷீனா, மைக்கேல் ஆகியோர் உயிருடன் இருப்பது பிடிக்கவில்லை.
ஷீனாவும், மைக்கேலும் இந்திராணி, பீட்டரை மிரட்டி பணம் வாங்கி வந்துள்ளனர். இதனால் அவர்கள் ஷீனா, மைக்கேல் ஆகியோரை கொலை செய்ய முடிவு செய்தனர். ஷீனாவை இந்திராணி கொலை செய்தார் ஆனால் மைக்கேல் தப்பித்துவிட்டார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிக்கையின் நகல் பீட்டரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில்,
நான் சிறையில் அமர்ந்து குற்றப்பத்திரிக்கையை படித்துப் பார்ப்பேன். ஷீனாவின் கொலைக்கும் எனக்கம் எந்தவித தொடர்பும் இல்லை. ஷீனாவை கொலை செய்ய தீட்டப்பட்ட சதியில் எனக்கு பங்கு இல்லை என்றார்.