ஷீனா கொலை வழக்கு: இந்திராணி உள்ளிட்ட 3 பேரின் நீதிமன்ற காவல் 19ம் தேதி வரை நீட்டிப்பு
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திராணி முகர்ஜி, அவரின் முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா மற்றும் முன்னாள் டிரைவர் ஷியாம் ராய் ஆகியோரின் நீதிமன்ற காவல் வரும் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார் இந்தியா நிறுவன முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி தனது முதல் கணவருக்கு பிறந்த ஷீனா போராவை தனது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா, முன்னாள் கார் டிரைவர் ஷியாம் ராய் ஆகியோருடன் சேர்ந்து கடந்த 2012ம் ஆண்டு கொலை செய்தார்.
இந்த வழக்கில் 3 ஆண்டுகள் கழித்து இந்திராணி, சஞ்சீவ் மற்றும் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கடந்த மாதம் 7ம் தேதியில் இருந்து நீதிமன்ற காவலில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த மூன்று பேரின் நீதிமன்ற காவல் திங்கட்கிழமையுடன் முடிந்தது. இதையடுத்து போலீசார் சஞ்சீவ் மற்றும் ராயை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்திராணி உடல்நலம் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை.
ஷீனாவின் கொலை வழக்கை சிபிஐ அண்மையில் தங்கள் வசம் ஆக்கியது. இதையடுத்து இந்திராணி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் அவர்களின் நீதிமன்ற காவலை நீட்டிக்குமாறு சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் இந்திராணி, சஞ்சீவ், ராய் ஆகியோரின் நீதிமன்ற காவலை வரும் 19ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.