ஷீனா உடலை எரிக்க 10 லிட்டர் பெட்ரோலை விற்றவர் முக்கிய சாட்சியாகிறார்
மும்பை: ஷீனா போராவின் உடலை எரிக்கப் பயன்படுத்தப்பட்ட 10 லிட்டர் பெட்ரோலை விற்ற நபர் முக்கிய போலீஸ் தரப்பு சாட்சியாகிறார். அவரது வாக்குமூலத்தை வைத்து இந்திராணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை வலுவாக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
ஷீனா போரா கொலை வழக்கில் தொடர்ந்து இந்திராணி தரப்புக்கு எதிரான பிடி வலுவடைந்து வருகிறது. இந்த நிலையில் ஷீனாவின உடலை எரிக்க பெட்ரோல் வாங்கிய பெட்ரோல் பங்கின் ஊழியர், இந்திராணி உள்ளிட்டோருக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் இந்திராணியின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 2 சூட்கேஸ்களை விற்ற கடைக்காரரும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சூட்கேஸ்கள்...
இதில் ஒரு சூட்கேஸில் ஷீனாவின் தம்பி மிக்கயிலைக் கொலை செய்து அதில் உடலை அடைக்க இந்திராணி குரூப் திட்டமிட்டிருந்தது. இன்னொரு சூட்கேஸில் ஷீனாவை எரித்து சாம்பலை அதில் அடைத்துக் கொண்டு போய் போடத் திட்டமிட்டிருந்தாராம் இந்திராணி.
கடைக்காரர் வாக்குமூலம்...
இந்திராணி மிகப் பெரிய சூட்கேஸாக வேண்டும் என்று குறிப்பிட்டுக் கேட்டு வாங்கிச் சென்றதாக கடைக்காரர் தெளிவாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால அவர் தற்போது முக்கிய சாட்சியாகியுள்ளரர்.
டிப்ஸ் வேறு...
மேலும் இந்த சூட்கேஸின் விலை ரூ. 700தானாம். ஆனால் இந்திராணி அதனை ரூ. 1500 கொடுத்து வாங்கிச் சென்றுள்ளார். மேலும் அந்த சூட்கேஸை காரில் கொண்டு வந்து வைக்கச் சொல்லிய பின்னர் கடைக்காரருக்கு ரூ. 300 டிப்ஸாகவும் கொடுத்துள்ளார் இந்திராணி.
பெரிய சூட்கேஸ்...
சூட்கேஸ் மிகப் பெரிதாக இருந்ததால் அதைத் தலை மீது தூக்க வைத்துக் கொண்டு போய் காரில் வைத்ததாக கடைக்காரர் கூறியுள்ளார். இந்திராணியே நேரில் வந்து சூட்கேஸை வாங்கியுள்ளார். அப்போது டிரைவர் ராய் காரில் இருந்துள்ளார்.
10 லிட்டர் பெட்ரோல்...
அதேபோல டிரைவர் ராய் வந்து 10 லிட்டர் பெட்ரோலை வாங்கியதை பெட்ரோல் பங்க் ஊழியர் உறுதிப்படுத்தியுள்ளார். அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. இதனால்தான் அங்கு சென்று பெட்ரோல் வாங்கியுள்ளார் ராய்.
மறக்க முடியுமா...
கேன் கேனாக பத்து லிட்டர் வாங்கியதால் ராயின் முகம் அந்த ஊழியருக்கு நன்றாக மனதில் பதிந்து போய் விட்டது. யாருமே இப்படி அதிக அளவில் பெட்ரோலை கேன்களில் வாங்க மாட்டார்கள் என்பதால் ராயின் முகத்தை மறக்க முடியவில்லை என போலீஸ் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார்.