இந்திராணி தாயே அல்ல, சூனியக்காரி.. ஷீனாவின் "டைரிக் குறிப்பு"!
மும்பை: இந்திராணி முகர்ஜியால் கொலை செய்யப்பட்ட ஷீனா போரா எழுதிய டைரி தற்போது கிடைத்துள்ளது.
ஷீனா போரா தனது தாய் இந்திராணி முகர்ஜியால் கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இந்திராணி, அவரது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா, முன்னாள் டிரைவர் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஷீனாவின் டைரி கிடைத்துள்ளது. அதில் ஷீனா எழுதி வைத்திருப்பதாவது,
அப்பா
அப்பா நான் உங்கள் மீது கோபமாக உள்ளேன். எனக்கு தான் உங்களுக்கு கடிதம் எழுத நேரம் இல்லை. நீங்களாவது எனக்கு எழுதலாமே. பத்தாம் வகுப்பில் கடினமாக உழைக்க வேண்டி உள்ளது. நான் கைவிரல் நகத்தை நறுக்கியுள்ளேன். நான் உங்களின் அறிவுரைப்படி முதலில் படிப்பு அதன் பிறகு ஸ்டைல் என உள்ளேன். என் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு முன்பு டிசம்பரில் நீங்கள் கவுஹாத்தி வந்து என்னை பார்த்தால் என்ன? அப்போது நீங்கள் என்னிடம் கூற வேண்டியவற்றை எல்லாம் கூறலாம் என்று ஷீனா தனது டைரியில் தெரிவித்துள்ளார்.
பொய்
ஷீனாவுடன் தனக்கு தொடர்பே இல்லை என்று சித்தார்த் தாஸ் தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கும், ஷீனாவுக்கும் இடையே கடிதப் போக்குவரத்து இருந்துள்ளது. ஷீனா தனது தந்தைக்கு கடிதங்கள் எழுதி வந்துள்ளார்.
தொழில்
அப்பா, எனது இரண்டு தாய் மாமாக்களுடன் சேர்ந்து தொழில் துவங்காதீர்கள். அதில் ஒருவர் நல்ல வேலை ஒன்றை தேடிக் கொண்டிருக்கிறார். வேலை கிடைத்ததும் அவர் உங்களிடம் இருந்து பிரிந்துவிடுவார். நீங்கள் ஏன் பிறரை நம்பாமல் தனியாக தொழில் துவங்கக் கூடாது என்று ஷீனா டைரியில் குறிப்பிட்டுள்ளார்.
ஜாதி
அப்பா, நாம் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள். பள்ளியில் சில விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய ஜாதியின் பெயரை கேட்கிறார்கள். நம் ஜாதி என்ன என்று எனக்கு குழப்பமாக உள்ளது என்று டைரியில் தெரிவித்துள்ளார் ஷீனா. சித்தார்த் தாஸ் கடந்த 2001ம் ஆண்டு கவுஹாத்தியில் ஷீனாவை சந்தித்துள்ளார். அப்போது ஷீனா சித்தார்த்தை தனது தந்தை என்று நெருங்கிய தோழியிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
தாத்தா
தாத்தா, பாட்டிக்கு உங்களை பிடிக்கவில்லை அப்பா. அதனால் உங்களுக்கு போன் செய்து பேசக் கூடாது என்கிறார்கள் என்று டைரியில் குறிப்பிட்டுள்ள ஷீனா ஐஎன்எக்ஸ் மீடியா பற்றி செய்தித்தாள்களில் வந்த தனது தாய் இந்திராணியின் புகைப்படங்களை வைத்துள்ளார்.
பிறந்தநாள்
எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை. என் வாழ்க்கையில் எதுவுமே இல்லை. என் எதிர்காலம் இருண்டுள்ளது. மனஅழுத்தம் தான் அனைத்து பக்கங்களிலும் என்னை சூழ்ந்துள்ளது. நான் என் அம்மாவை வெறுக்கிறேன். அவர் தாய் அல்ல சூனியக்காரி. தற்போது அவர் அந்த வயதான நபரை திருமணம் செய்துள்ளார்.(பீட்டர் முகர்ஜி)இது எனக்கு பிடிக்கவில்லை என்று டைரியில் தெரிவித்துள்ளார் ஷீனா. ஷீனா பத்தாம் வகுப்பு படிக்கும் போதில் இருந்து டைரி எழுதியுள்ளார்.