ஷீலா தீட்சித்... உ.பி. முதல்வர் வேட்பாளரா? பஞ்சாப் மேலிட பொறுப்பாளரா? காங். தீவிர ஆலோசனை
டெல்லி: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தை முன்னிறுத்துவதா? அல்லது பஞ்சாப் மேலிட பொறுப்பாளராக நியமனம் செய்வதா? என்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மகள் பிரியங்கா காந்தி முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் இது தொடர்பான கேள்விகளுக்கு மவுனமாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தை உ.பி. முதல்வர் வேட்பாளராக்கலாம் என காங்கிரஸ் மேலிடம் யோசித்து வருகிறதாம். அதே நேரத்தில் பிரியங்கா காந்தி தலைமையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவும் திட்டமிட்டு வருகிறதாம்.
ராகுல் அல்லது பிரியங்கா
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் அண்மையில் ஷீலா தீட்சித்தை நேரில் சந்தித்து பேசியிருந்தார். இருந்தபோதும் ராகுல் அல்லது பிரியங்காவை முன்னிறுத்தினால் வெல்ல முடியும் என பிரசாந்த் கிஷோர் தம்முடைய கருத்தாக காங்கிரஸ் மேலிடத்திடம் கூறியிருக்கிறார்.
ஷீலா தீட்சித்
இருப்பினும் ஷீலா தீட்சித்தின் மாமனார் உமாசங்கர் தீட்சித், உத்தரப்பிரதேச காங்கிரஸின் மூத்த தலைவராக திகழ்ந்தவர். மத்திய அமைச்சராக இருந்தவர். ஆகையால் அவரையே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தலாம் என்றே கருதுகிறதாம் காங்கிரஸ் மேலிடம். இன்று சோனியா, ராகுலை ஷீலா தீட்சித் சந்தித்தும் பேச இருக்கிறார்.
கமல்நாத்தால் சர்ச்சை
இதனிடையே பஞ்சாப் மாநில காங். மேலிட பொறுப்பாளராக ஷீலா தீட்சித் நியமிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பஞ்சாப் மாநில மேலிட பொறுப்பாளராக கமல்நாத் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் 1984-ம் ஆண்டு சீக்கியர்கள் மீதான வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டதில் கமல்நாத்துக்கு நேரடி தொடர்பு உண்டு; அவரை நியமித்ததன் மூலம் சீக்கியர்களை காங்கிரஸ் அவமதித்துவிட்டது என அகாலிதளம், ஆம் ஆத்மி கட்சிகள் பிரசாரம் செய்தன.
ஷீலா தீட்சித் நியமனம்?
இந்த பிரசாரம் நீடிக்காமல் இருக்க கமல்நாத் தம்முடைய மேலிட பொறுப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதனால் இந்த இடத்துக்கு ஷீலா தீட்சித் நியமிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது என்கிறன காங்கிரஸ் வட்டாரங்கள்.