நேபாளத்தின் புதிய பிரதமரானார் ஷெர் பகதுர் தியுபா! தெற்காசிய நாடு உறவில் முன்னேற்றம்?
காத்மாண்டு: நேபாளம் நாட்டின் புதிய பிரதமராக ஷெர் பகதுர் தியுபா பதவியேற்றுள்ளார். இதனால் தெற்காசிய நாடுகளின் உறவில் நேபாளம் புதிய முன்னேற்றத்தை ஏற்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அந்நாட்டில், இடதுசாரிகள் மற்றும் நேபாளி காங்கிரஸ் கட்சி இணைந்து, பிரதமர் பதவியை சுழற்சி முறையில் பங்கிட்டு, ஆட்சி நடத்தி வருகின்றன. இதன்படி, முந்தைய பிரதமராக இருந்த இடதுசாரிகள் தலைவரான பிரசந்தா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, நேபாளம் நாட்டின் 40வது பிரதமராக 70 வயதாகும் நேபாளி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷெர் பகதுர் தியுபா பதவியேற்றுள்ளார். அவருக்கு இன்று குடியரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
அவருக்கு ஆதரவாக, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், 388 பேர் வாக்களித்துள்ளனர். இவர் ஏற்கனவே, 3 முறை நேபாள பிரதமராக பதவி வகித்துள்ளார். இந்திய ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவராகக் கருதப்படும் தியுபா, தெற்காசிய பிராந்தியத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப திறம்பட செயல்படுவார் என, நேபாள ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவர் பதவியில் தொடர்வார். அதன்பின், பிரதமர் பதவிக்கு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.