மொகலாயர்கள் நினைவுச்சின்னத்தை இடிக்க அனுமதிப்பாரா பிரதமர் மோடி?
பழமையான ஹூமாயூன் ஸ்தூபியை இடித்துவிட்டு இடுகாடு அமைக்க வக்ஃபு வாரியம் பிரதமரிடம் அனுமதி கோரியுள்ளது.
டெல்லி : டில்லியில் இருக்கும் ஹூமாயூன் ஸ்தூபியை இடிக்க அனுமதி கேட்டு ஷியா வக்ஃபு வாரியம், பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதி உள்ளது.
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் இருக்கும் ஹூமாயின் நினைவு ஸ்தூபி, முகலாய அரசி ஹாஜி பேகத்தினால் அவரது கணவரின் நினைவாகக் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்தை யுனெஸ்கோ புராதான சின்னமாக 1993ம் ஆண்டு அறிவித்தது. தற்போது இந்தக் கட்டிடம் மிகவும் பாழடைந்துள்ளது.
கடந்த 15ம் தேதி இரு இஸ்லாமிய அமைப்புகள் தங்களுக்கு இடுகாடு வசதி செய்து தர வேண்டி, உ.பி ஷியா வக்ஃபு வாரியத்திற்கு கடிதம் எழுதியது. தலைநகரிலோ அல்லது அதற்கு அருகிலோ இடம் ஒதுக்கித் தர வேண்டி கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் பல இடங்களை ஆய்வு செய்த வக்ஃபு வாரியம் இறுதியில் ஹூமாயுன் ஸ்தூபியை இடித்து விட்டு அங்கு இடுகாடு அமைக்க முடிவு செய்துள்ளது. அதற்கு அனுமதி கேட்டு பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அதில், 'ஸ்தூபி இருக்கும் இடம் மதச்சின்னம் இல்லை. அங்கு ஏற்கனவே இடுகாடு இருந்துள்ளது. அந்த இடத்தில் இருக்கும் ஸ்தூபியை அகற்ற அனுமதி அளிக்க வேண்டும்' என்று கோரி உள்ளது.
இன்னமும் இந்தக்கடிதத்தின் மீது பிரதமரோ, பிரதமர் அலுவலகமோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.