அயோத்தியில் ராமர் கோவில், லக்னோவில் மசூதி.. தீர்வுக்கு ஐடியா கொடுக்கும் முஸ்லீம் வாரியம்
இந்து - முஸ்லீம் பிரச்னைக்கு தீர்வு காண ஷியா வக்ஃபு வாரியம் தீர்வை முன்மொழிந்துள்ளது.
டெல்லி: பல ஆண்டுகளாக நிலவி வரும் அயோத்தி ராமர் கோவில் பிரச்னைக்கு ஷியா வஃக்பு வாரியம் அமைதிக்கான தீர்வை உச்சநீதிமன்றத்தில் முன்மொழிந்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராம ஜென்மபூமி - பாபர் மசூதி விவகாரம் பல ஆண்டுகளாக இந்து - முஸ்லீம் மக்களிடையே மோதலுக்கு காரணமாக இருந்து வருகிறது. இதற்கு உத்தரபிரதேசத்தின் ஷியா வஃக்பு வாரியம் உச்சநீதிமன்றத்தில் அமைதிக்கான தீர்வு ஒன்றை முன்மொழிந்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் அளிக்க்கப்பட்ட மனுவில், அயோத்தியில் இந்துக்கள் ராமர் கோவில் கட்டிக்கொள்ளட்டும் அதற்கு பதிலாக எங்களுக்கு லக்னோவில் மசூதி கட்ட இடம் ஒதுக்கித் தருமாறு கோரிக்கை வைத்துள்ளது. தேசிய நலன் கருதியும், பல ஆண்டுகளாக நிலவி வரும் பிரச்னைக்கு முடிவு கோரும் பொருட்டும், இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காகவும் இதை செயல்படுத்தவும் வக்ஃபு வாரியம் வலியுறுத்தி உள்ளது.
நிரந்தரத் தீர்வு தேவை
இதை செயல்படுத்தும் பட்சத்தில் மாநில அரசு, லக்னோவில் ஷியா முஸ்லீம்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கித்தரவேண்டும் என்று அதில் தாங்கள் புதிய மசூதியை கட்டிக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அமைதிக்கு வழி சொல்லும் வாரியம்
இதுகுறித்து வக்ஃபு வாரியத்தின் தலைவர் கூறும்போது, இந்துக்களின் மத உணர்வைப் புரிந்துகொண்டும், தேசிய நலனில் அக்கறை கொண்டும் பாபர் மசூதி இருந்த இடத்தின் உரிமையை விட்டுத்தர நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இதற்கு மாநில் அரசும் முன்வந்து தீர்வு காண வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் பிரச்னை
1992ம் ஆண்டு கரசேவகர்களால் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் இந்து - முஸ்லீம் கலவரம் பெரிய அளவில் வெடித்து உயிர் சேதங்கள் அதிக அளவில் ஏற்பட்டது. தற்போது அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்று இந்து அமைப்புகள் தீவிரமாக இயங்கி வருகின்றன.
எதிர்காலத் தேவை கருதி
அரசியல் தேவை ஏற்படும் சமயங்களில் இந்த கோரிக்கை தீவிரமடைவதால், தேசிய பாதுகாப்பிற்கு அச்சம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கூட நீதிமன்றம் என்ன உத்தவிரவிட்டாலும், நாங்கள் இங்கு கோவில் கட்டியே தீருவோம் என்று ஒரு சில இந்து அமைப்புகள் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஷியா அமைப்பின் இந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், அங்கு அமைதி திரும்பும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.