இல்லாத எய்ட்ஸ் நோயை இருப்பதாக சொன்ன மருத்துவர்.. அதிர்ச்சியில் உயிரிழந்த பெண்
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் எய்ட்ஸ் நோய் இருப்பதாக மருத்துவர் தவறான தகவலை கூறியதால் அதிர்ச்சியில் கோமா நிலைக்கு சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக நீதி விசாரணைக்கு இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர் உத்தரவிட்டுள்ளார்.
இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவருக்கு 8 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்ட காரணத்தால் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சோதனையின் முடிவில் அந்த பெண்ணுக்கு எய்ட்ஸ் இருப்பதாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண் கோமா நிலைக்கு சென்றுவிட்டார. கோமா நிலையிலேயே அந்த பெண் சிகிக்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இதனிடையே பெண் அதிர்ச்சி அடைந்த கோமா நிலைக்கு சென்ற பின்னர், அந்த பெண்ணுக்கு உண்மையில் எய்ட்ஸ் இருக்கிறதா என்பதை அறிய அரசு மருத்துவனையில் மறு பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவில் அந்த பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய் இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து தனியார் மருத்துவமனை தவறான தகவலை அந்த பெண்ணுக்கு கூறியிருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அந்த தனியார் மருத்துவமனை மீதும் எய்ட்ஸ் இருப்பதாக தவறான தகவலை சொன்ன மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதனிடையே கவனக்குறைவாக செயல்பட்ட தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர் உறுதி அளித்துள்ளார். மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணத்தை மருத்துவமனை நிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.