வாரணாசி கங்கா ஆரத்தியில் மோடியுடன் பங்கேற்ற ஜப்பான் பிரதமர்..!
டெல்லி: மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி வந்த ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்பினார்.
அவரது இந்தப் பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது சர்வதேச மற்றும் பிராந்திய ரீதியிலான பிரச்சனைகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.
குறிப்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை விரைவாக மேற்கொள்ள வற்புறுத்துவது குறித்தும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பின்னர், ரூ.97 ஆயிரத்து 636 கோடி மதிப்பீட்டில் புல்லட் ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இதேபோல ராணுவ தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பரிமாறிக்கொள்வது, சிவில் அணுசக்தி தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின. மேலும், அணுசக்தியை ஆக்கப்பூர்வ பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்வது, இந்திய-பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைதி நிலவ ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பான ‘இந்தியா-ஜப்பான் 2025 தொலை நோக்கு திட்டம்' என்னும் கூட்டறிக்கையையும் இரு நாட்டுத்தலைவர்களும் சேர்ந்து வெளியிட்டனர்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரனாசிக்குச் சென்ற அபே, தசாஸ்வமேத படித்துறையில் நடைபெற்ற ' கங்கை ஆரத்தி' எனும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் இனைந்து கலந்துகொண்டார்.
இந்நிலையில், இந்தியாவில் தனது மூன்று நாள் அரசு முறைப்பயனத்தை முடித்துக்கொண்ட ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே இன்று நாடு திரும்பினார். அவரை ஜப்பான் தூதரக அதிகாரிகளும், மத்திய நிதி இணையமைச்சர் ஜெயந்த் சின்காவும் டெல்லி விமானநிலையத்தில் வழியனுப்பி வைத்தனர்.