மோடிக்கு நெருக்கடி: சிவசேனா, தெலுங்குதேசம் கட்சிகளைத் தொடர்ந்து தேஜகூவிலிருந்து விலகும் அகாலி தள்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அகாலி தளமும் போர்க்கொடி தூக்கியுள்ளது.
டெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கலகலத்து வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிவசேனா விலகிய நிலையில் தெலுங்குதேசம் கட்சி மற்றும் அகாலி தளம் கட்சிகள் பாஜகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.
மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை கூட்டணியில் இருந்த போதும் கடுமையாக விமர்சித்து வந்தது சிவசேனா. இதனைத் தொடர்ந்து பாஜகவுடனான உறவை முறித்துக் கொள்வதாக பிரகடனம் செய்தது சிவசேனா.
இதேபோல் தெலுங்குதேசம் கட்சியும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு போதுமான நிதியை ஒதுக்கவில்லை என தெலுங்குதேசம் கட்சி குற்றம்சாட்டியது.
பாஜக தலைவர்கள் சமாதானம்
அத்துடன் பாஜகவுடனான கூட்டணியை தொடருவது குறித்து தெலுங்குதேசம் கட்சியின் ஆட்சி மன்ற குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து பதறிப் போன பாஜக மேலிடத் தலைவர்கள், சந்திரபாபு நாயுடுவிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் தெலுங்குதேசத்தின் கோபம் சற்று தணிந்துள்ளது.
விலகுகிறது அகாலி தள்?
இதனிடையே பாஜகவின் மற்றொரு கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளம் இப்போது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அகாலி தளம் எம்.பி. பிரேம்சிங் சந்துமஜ்ரா, வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எங்களுக்கு கிடைத்த மரியாதை இப்போது தரப்படுவதில்லை. எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களை ஆளுநர்களாக நியமித்தார் வாஜ்பாய். சிறுபான்மை கமிஷன் தலைவராகவும் நியமித்தார். ஆனால் இப்போது எதுவும் எங்களுக்கு தரப்படவில்லை. கூட்டணி கட்சி என்பதற்கான மரியாதையும் கிடைப்பது இல்லை என குமுறியிருக்கிறார்.
பீகாரிலும் பாஜகவுக்கு நெருக்கடி
இதேபோல் பீகாரில் மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாவின் ராஷ்டிரிய லோக்சமதா கட்சி, பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா ஆகியவையும் பாஜகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன. பீகார் சட்டசபை தேர்தலில் கணிசமான இடங்களை ஒதுக்காவிட்டால் கூட்டணியை முறிப்போம் என இந்த கட்சிகளும் அறிவித்துள்ளன.
தக்க வைக்க முயற்சி
வரும் லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காது என கூறப்படும் நிலையில் அடுத்தடுத்து கூட்டணி கட்சிகள் விலகத் தொடங்கியுள்ளது பாஜகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் கூட்டணிக் கட்சிகளை தக்க வைக்க பகீர பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது பாஜக.