அன்னை தெரசா மதப்பிரச்சாரகரே: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கருத்துக்கு சிவசேனா ஆதரவு!
மும்பை: அன்னை தெரசா ஒரு மதப்பிரச்சாரகர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கருத்து கசப்பான உண்மை என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
சிவசேனாவின் அதிகாரபூர்வ ஏடான சாம்னாவில் எழுதப்பட்டுள்ள தலையங்க விவரம்:
கிறிஸ்தவ மிஷனரிகள் இந்தியாவுக்கு வந்ததற்குக் காரணம் மதமாற்றமே. முஸ்லிம்கள் மதமாற்றத்தை கத்தி முனையில் மேற்கொண்டனர், கிறிஸ்தவர்கள் அதை பண பலத்தாலும், சேவை என்ற போர்வையிலும் மேற்கொண்டனர்.
இந்த விவகாரத்தில் உண்மையைப் பேசியதன் மூலம் மோகன் பகவத் தேசத்துக்கு நன்மை செய்திருக்கிறார். அன்னை தெரசாவின் சேவைகளை நாங்கள் மதிக்கிறோம்.
அன்னை தெரசாவைப் போல், இந்து மதத்தைச் சேர்ந்த நிறைய சமூக ஆர்வலர்களும் ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் மதமாற்றத்தில் ஈடுபடவில்லை.
அன்னை தெரசாவோ சேவை என்ற போர்வையில் மதமாற்றத்தில் ஈடுபட்டார் என்பது கசப்பான உண்மை. இந்த உண்மையையே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் எடுத்துக் கூறியுள்ளார்.
அவரது கருத்தால் மதம் மாறியவர்களை தாய் மதத்துக்கு திரும்பச் செய்யும் கர் வாப்சி பிரச்சாரம் வலுப்பெறும். இதற்காக, மோகன் பாகவத்தை சிவசேனா வெகுவாக பாராட்டுகிறது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.