தாவூத்துக்கா சுஷ்மா ஸ்வராஜ் உதவினார்? பாஜகவில் இருந்து வெளியேற்றவும் சதி- சிவசேனா வக்காலத்து!
டெல்லி: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு சுஷ்மா ஸ்வராஜ் உதவியைப் போல எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பதா? என்று சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐ.பி.எல். நிதி மோசடியில் சிக்கி லண்டனுக்கு தப்பிச் சென்றவர் லலித் மோடி. அவருக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவினார் என்பதுதான் பிரச்சனை.
இதனால் சுஷ்மா ஸ்வராஜ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா போன்ற இந்துத்துவா அமைப்புகள் சுஷ்மாவுக்கு ஆதரவாக உள்ளன.
அரசியல் விளையாட்டு
சுஷ்மாவை ஆதரித்து சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் எழுதப்பட்டுள்ள தலையங்கம்:
பாஜகவில் இருந்து சுஷ்மா ஸ்வராஜை வெளியேற்றியே தீர வேண்டும் என்ற முனைப்பில் அரசியல் விளையாட்டை சிலர் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இவ்விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தலையிட்டு சுஷ்மாவுக்கு எதிராக செயல்படுவது யார் என்பதை கண்டறிய வேண்டும்.
தூண்டுவது யார்?
லலித் மோடி விசா பெறுவதற்கு உதவிய விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால் அவர்களது எதிர்ப்புக்கு பலம் இல்லை. ஆனால், இவ்விவகாரத்தில் காங்கிரஸை தூண்டிவிட்டு போராட்டத்துக்கு உயிர் கொடுப்பது யார் என்பதை கண்டறிய வேண்டும்.
தாவூத்துக்காக உதவி?
யாருடைய உந்துதல் காரணமாக காங்கிரஸ் இத்தகைய உத்வேகத்துடன் சுஷ்மாவை எதிர்க்கிறது என்பதை அறிய வேண்டும். காங்கிரஸ் எதிர்வினையைப் பார்த்தால், சுஷ்மா ஏதோ தாவூத் இப்ராஹிமுக்கும், கசாபுக்கும் ஜாமீன் கிடைக்க உதவியதுபோல் இருக்கிறது.
நாளை பிரதமரா?
உள்துறை ராஜ்நாத் சிங் மகனுக்கு எதிராக சில புகார்கள் எழுந்தன. அதேபோல் பாஜக தலைவர் நிதின் கட்கரி மீதும் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
பாஜக அமைச்சர்கள் மீது இவ்வாறாக அவதூறுகள் பரப்பப்படுவது தொடர்கதையானால் எதிர்காலத்தில் பிரதமர் மோடியும் இதேபோன்ற ஏதாவது ஒரு அவதூறு குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நிலை ஏற்படக் கூடும்.
இதனால் சுஷ்மா ஸ்வராஜ் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அரசியல் விளையாட்டு நடத்துபவர்கள் யார் என்பதை அம்பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு சாம்னாவில் எழுதப்பட்டுள்ளது.