மகா. சட்டசபை தேர்தல்: பாஜக- சிவசேனா தொகுதிப் பங்கீட்டில் இழுபறி! 'முதல்வர்' பதவியால் முட்டுக்கட்டை!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா, சிவசேனா கட்சிகளிடையேயான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. முதல்வர் பதவி தங்களுக்கே என்று இரு கட்சிகளும் கோருவதால் தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்ட சபைக்கு அக்டோபர் 15-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் அக்டோபர் 19-ந்தேதி தெரியவரும்.
288 இடங்களை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் - தேசிய வாத காங்கிரசின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை தட்டிப்பறிக்க பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
யார் முதல்வர் வேட்பாளர்?
ஆனால் பாஜக- சிவசேனா கூட்டணியில் எது பெரிய கட்சி? யாருக்கு முதல்வர் வேட்பாளர் என்பதால் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.
2009 தேர்தலில்..
கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தலில் மொத்தம் உள்ள 288 இடங்களில் சிவசேனா 169 இடங்களிலும் பாஜக 119 இடங்களிலும் போட்டியிட்டது. ஆனால் தற்போதைய தேர்தலில் பாஜகவும் சிவசேனாவும் தலா 135 தொகுதிகளிலும் இதர கூட்டணிக் கட்சிகளுக்கு 18 தொகுதிகளையும் ஒதுக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது.
சிவசேனா நிராகரிப்பு
இதை சிவசேனா முற்றாக நிராகரித்து வருகிறது. தாங்களே அதிக இடங்களில் போட்டியிடுவோம் என்று சிவசேனா கூறி வருகிறது.
உத்தவ்தாக்கரேதான் முதல்வர்?
அத்துடன் மகாராஷ்டிரா மாநிலத்தின் அடுத்த முதல்வர் சிவசேனாவைச் சேர்ந்தவர்தான் என்பதில் அக்கட்சி உறுதியாக இருக்கிறது. குறிப்பாக உத்தவ்தாக்கரே, தானே அடுத்த முதல்வர் என்று ஊடகங்களில் கூறிவருகிறார்.
பாஜக கோபம்
இதில் பாரதிய ஜனதா கட்சி கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா மாநில பாஜக மேலிடப் பொறுப்பாளர் பிரதாப் ரூடி, தேர்தலுக்கு முன்பு முதல்வர் வேட்பாளர் பற்றி கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும். சிவசேனாவும் பாஜகவும் தலா 135 இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. இதற்கு சிவசேனா தெரிவிக்கும் பதிலைப் பொறுத்தே அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றார்.
சிவசேனா திட்டவட்டம்
ஆனால் இதை நிராகரித்துள்ள சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத், மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொறுத்தவரையில் அடுத்த முதல்வர் சிவசேனாவைச் சேர்ந்தவர்தான் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார்.
முட்டுக்கட்டை
இதனால் பாஜக, சிவசேனா இடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.