'இந்துமகா சபை' வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது கொடுங்க... கேட்பது சிவசேனா
டெல்லி: இந்துமகா சபையின் முன்னணி தலைவராக இருந்தவரும் மகாத்மா காந்தி கொலை வழக்கில் சதிகாரராக சேர்க்கப்பட்டு விடுவிக்கப்பட்டவருமான வீர சாவர்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவுத் எம்.பி எழுதியுள்ள கடிதம்:
மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நாட்டின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னாவை வீர சாவர்கருக்கு வழங்க வேண்டிய தருணம் இது. இந்த பாரத ரத்னா விருது வழங்கும் விழாவை அவர் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய போது அடைக்கப்பட்டிருந்த அந்தமான் செல்லுலார் சிறையில் நடத்த வேண்டும்.
'இந்துராஷ்டிரா' என்ற கோட்பாட்டை ஆதரித்த ஒரே காரணத்துக்காக சாவர்கருக்கு பாரத ரத்னா விருதை முந்தைய அரசுகள் வழங்க மறுத்துவிட்டன. அந்த தவறு உங்களுடைய அரசு சரி செய்தாக வேண்டும்.
இவ்வாறு சஞ்சய் ராவுத் கூறியுள்ளார்.
மகாத்மா படுகொலை வழக்கில் கோட்சேவுடன் சேர்ந்து முக்கிய சதிகாரராக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் வீர சாவர்கர். பின்னர் போதிய ஆதாரமில்லை என நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.