தேசியவாத காங்கிரஸ் உதவியை ஏற்றால் எதிர்கட்சியாகி அரசுக்கு எதிராக வாக்கு: சிவசேனா எச்சரிக்கை
மும்பை: மகாராஷ்டிராவின் மைனாரிட்டி பாஜக அரசு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உதவியை ஏற்றால் தாங்கள் எதிர்கட்சி இருக்கையில் அமர்வோம் என்று சிவசேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக மைனாரிட்டி அரசு பொறுப்பேற்றுள்ளது. அந்த அரசு சட்டசபையில் தனது பொரும்பான்மையை வரும் 12ம் தேதி நிரூபிக்க வேண்டும். இதையடுத்து சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மோடி தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்தபோது சிவசேனா பரிந்துரைத்த அனில் தேசாய்க்கு பதவி வழங்காமல் அதே கட்சியை சேர்ந்த சுரேஷ் பிரபுவுக்கு கேபினட் அமைச்சர் பதவி அளித்தார். பிரபு பதவியேற்கும் முன்பு சிவசேனாவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டசபை பற்றி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில்,
தேசிய ஜனநாயக கூட்டணி அரசுடன் சேர்ந்து செயல்படுவதா என்பது பற்றி கட்சி ஆலோசித்து வருகிறது. நாங்கள் அரசில் சேர அவசரப்படவில்லை. அவர்கள் எங்களை தொடர்ந்து அவமதித்து வந்தால் நாங்கள் ஏன் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்? இன்னும் 2 நாட்களில் பாஜக தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும். பாஜக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உதவியை ஏற்றால் நாங்கள் எதிர்கட்சி இருக்கையில் அமர்ந்து அரசுக்கு எதிராக வாக்களிப்போம். இனியும் அவமரியாதைகளை சகித்துக் கொள்ள முடியாது.
அவர்கள் விரும்பியதை எல்லாம் செய்து கொண்டே இருப்பார்கள். இருப்பினும் நாங்கள் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள் என்றார்.
சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் 25 ஆண்டு கால பாஜக-சிவசேனா கூட்டணி உடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.