சந்தர்ப்பவாத என்சிபி-காங்.- சிவசேனா கூட்டணி அரசு 6 மாதம் கூட நீடிக்காது: நிதின் கட்காரி
Recommended Video
ராஞ்சி: மகாராஷ்டிராவில் என்சிபி-காங்கிரஸ்- சிவசேனா கூட்டணி 6 மாதங்கள் கூட நீடிக்காது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக ராஞ்சி வந்த நிதின் கட்காரி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
காங்கிரஸ்-சிவசேனா-என்சிபி கூட்டணி அடிப்படையில் சந்தர்ப்பவாத கூட்டணியாகும். இந்த மூன்று கட்சிகளுக்கும் ஒரே ஒரு நோக்கம் பாஜகவை ஆட்சி அமைக்க விடக் கூடாது என்பதுதான்.
இந்த மூன்று கட்சிகளுமே இணைந்து ஆட்சியை அமைக்க முடியுமா? என்பதே சந்தேகம்தான். அப்படியே இந்த சந்தர்ப்பவாத கூட்டணி ஆட்சியை அமைத்தாலும் அது 6 மாதங்கள் அல்லது 8 மாதங்கள் கூட நீடிக்காது.
மகாராஷ்டிராவில் கல்வி அமைச்சராகிறாரா ஆதித்யா தாக்கரே?
இந்த கூட்டணியால் நிலையான ஆட்சியைத் தர முடியாது. சிவசேனாவும் பாஜகவும் இந்துத்துவா கொள்கையின் அடிப்படையில்தான் கூட்டணி வைத்திருந்தன.
அப்போது முதல்வர் பதவி யாருக்கு என்பதை பின்னர் தீர்மானிக்கலாம் என்றுதான் முடிவு செய்திருந்தோம். ஆனால் எதிர்பாராத நிகழ்வுகள் நடந்துவிட்டன. நாங்கள் எங்களால் முடிந்த அளவு முயற்சிகளை மேற்கொண்டோம். அது பலனளிக்கவில்லை.
இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.