மகா. முதல்வராக நாளை மாலை 6.40 மணிக்கு பதவி ஏற்கிறார் உத்தவ் தாக்கரே- அழைப்பு விடுத்தார் ஆளுநர்!
Recommended Video
மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக நாளை மாலை 6.40 மணிக்கு உத்தவ் தாக்கரே பதவி ஏற்கிறார். இதற்கான அழைப்பு கடிதத்தை ஆளுநர் கோஷ்யாரி அனுப்பி வைத்தார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தொங்கு சட்டசபை உருவானது. பாஜக- சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்க முயன்றது கை கொடுக்கவில்லை.
சிவசேனா, என்சிபி கட்சிகளுக்கு ஆளுநர் கெடுவிதித்தும் உரிய நேரத்தில் ஆட்சிகள் அமையவில்லை. இதனால் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
பேச்சுவார்த்தை முடிந்தது
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ்-என்சிபி- சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்க பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தின. இப்பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேதான் முதல்வர் என முடிவு செய்யப்பட்டது.
திடீர் பாஜக அரசு
இதனையடுத்து சனிக்கிழமையன்று ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்து 3 கட்சிகளும் ஆட்சி அமைக்க உரிமை கோர திட்டமிட்டிருந்தன. ஆனால் யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக என்சிபியின் அஜித் பவார், பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தார். இதனால் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
உச்சநீதிமன்றம் உத்தரவு
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை 2 நாட்களாக விசாரித்த உச்சநீதிமன்றம், நாளை பட்னாவிஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட்டது.
பவார், பட்னாவிஸ் ராஜினாமா
ஆனால் 162 எம்.எல்.ஏக்கள் என்சிபி-காங்கிரஸ்- சிவசேனா அணியில் இருப்பது திட்டவட்டமானதால் பட்னாவிஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து முதலில் துணை முதல்வர் அஜித் பவாரும் அடுத்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் பதவிகளை ராஜினாமா செய்தார்.
முதல்வர் தேர்வு
மகாராஷ்டிராவில் 3 நாட்களில் பாஜக அரசு கவிழ்ந்துவிட்டது. இதனையடுத்து சிவசேனா- காங்கிரஸ்- என்சிபி இணைந்து புதிய அரசு அமைப்பது உறுதியாகி இருக்கிறது. அக்கூட்டணியின் முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ளார். மும்பையில் நடைபெற்ற மூன்று கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் உத்தவ் தாக்கரே முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
முதல்வராகும் உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிராவில் சிவசேனாவின் நிறுவனர் மறைந்த பால்தாக்கரே குடும்பத்தினர் நேரடி அரசியலுக்கு வராமல் இருந்தனர். மகாராஷ்டிராவில் தீர்மானிக்கும் சக்தியாக மட்டும் இருந்தனர். இத்தேர்தலில் உத்தவ் தாக்கரே அந்த மரபை உடைத்து மகன் ஆதித்யா தாக்கரேவை எம்.எல்.ஏவாக்கினார். தற்போது உத்தவ் தாக்கரேவே முதல்வராகவும் பதவி ஏற்க உள்ளார்.
உரிமை கோரினார்
ஆளுநர் கோஷ்யாரியை நேற்று இரவு சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரப்பட்டது. இதனை ஏற்று உத்தவ் தாக்கரே நாளை மாலை 6.40 மணிக்கு சிவாஜி பூங்காவில் பதவி ஏற்க வருமாறு அழைப்பு விடுத்து ஆளுநர் கடிதம் அனுப்பியுள்ளார்.