பால் தாக்கரேவை வணங்கும் மோடி: சிவசேனா போஸ்டரால் மும்பையில் சர்ச்சை
மும்பை: மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேவை, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட, பாஜக தலைவர்கள் வணங்கும் நிலையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் மும்பையில் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து அந்தப் போஸ்டர்களை சிவசேன கட்சியினர் நேற்று நீக்கியுள்ளனர்..
மராட்டிய மாநிலத்தில் பாஜக - சிவசேனா கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக, பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் உள்ளார். இம்மாநிலத்தில், பாஜக - சிவசேனா இடையிலான உறவில், நாளுக்கு நாள் விரிசல் அதிகமாகி வருகிறது.
கடந்த 19ம் தேதி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரிய அலுவலகத்துக்குள் புகுந்த சிவசேனா கட்சியினர், வாரிய தலைவர் ஷசாங்க் மனோகர், பாகிஸ்தான், கிரிக்கெட் கட்டுப்பாடு வாரிய தலைவர் ஷஹர்யார் கான் ஆகியோருக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால், இரு வாரியங்கள் இடையில் நடக்கவிருந்த பேச்சுவார்த்தை தள்ளிப் போனது.
கடந்த வாரம், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித் மஹ்முத் கசூரியின் புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்ற போது, அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த சுதீந்திர குல்கர்னியின் முகத்தில், சிவசேனா கட்சியினர், கருப்பு பெயின்ட் பூசியது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவசேனாவின் செயல்பாடுகளால், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
சிவசேனாவின் வன்முறையை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாஜக கூறினாலும், அக்கட்சியின் மீது நடவடிக்கை எடுக்க அரசியல் ஆதாயம் காரணமாக தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே மற்றும் வாஜ்பாய், அத்வானி, நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங் ஆகியோர் இருக்கும் புகைப்படங்களுடன் தாக்கரேயை மோடி தலைகுணிந்து வணங்குவது போன்ற புகைப்படம் அந்த விளம்பரங்களில் அட்சிடப்பட்டுள்ளது. அதில் ஏமாற்றுக்காரர் பாலாசாகிப்பை வணங்கும் காட்சி என்று குறிப்பி்டப்பட்டுள்ளது. இருக் கட்சிளுக்கிடையே உள்ள உரசல் அதிகரித்துள்ளதால் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த விளம்பரங்களுக்கு தங்களுக்கும் தொடர்பில்லை என்று சிவ சேனா மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மும்பையில், செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா கட்சி தலைவர்களில் ஒருவரான, ராஜேந்திர ரவுட், ''பழைய நாட்களை நினைவுகூரும் வகையில், போஸ்டர்களை ஒட்டினோம். எந்தவொரு கட்சித் தலைவரையும் இழிவுபடுத்தும் நோக்கில், இந்த போஸ்டர்கள் ஒட்டப்படவில்லை,'' என்றார்.
இந்த போஸ்டரால், அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இந்த போஸ்டரை, சிவசேனா கட்சியினர் நேற்று அப்புறப்படுத்தினர்.