எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம்: பலத்தை கூட்டும் பாஜக.. மத்திய அரசுக்கு சிவ சேனா ஆதரவு!
லோக்சபாவில் எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மான விவகாரத்தில் மத்திய அரசுக்கு சிவசேனா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
டெல்லி: லோக்சபாவில் எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மான விவகாரத்தில் மத்திய அரசுக்கு சிவசேனா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகின்றன.
15 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாளை லோக்சபாவில் எதிர்க்கொள்கிறது. 2003ஆம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தேசிய ஜனநாயக கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கொண்டது.
நம்பிக்கையில்லா தீர்மானம்
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாளை எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்கிறது.
முதல்வர் சூசகம்
ஏற்கனவே மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் தமிழக அரசு உள்ளது. இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி விவகாரத்தில் மற்ற மாநிலங்கள் தமிழகத்தை ஆதரிக்கவில்லை என சூசகமாக கூறினார்.
சிவசேனாவும் ஆதரவு
அவரது பதில் மத்திய அரசை அதிமுக அரசு ஆதரிக்கும் என்பதை மறைமுகமாக கூறுவதாகவே இருந்தது. இந்நிலையில் உத்தவ் தாக்ரேவின் சிவசேனா கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானம் விவகாரத்தில் மத்திய அரசை ஆதரிக்கும் என தெரிவித்துள்ளது.
எம்பிக்கள் ஆதரவு
நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவிடம் போனில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அக்கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக தங்கள் கட்சியின் 18 எம்பிக்கள் வாக்களிப்பர் என தெரிவித்துள்ளது.