'தனியொரு போராளி' பிரதமர் நரேந்திர மோடி.... சிவசேனா கிண்டல்
மும்பை: பிரதமர் மோடியின் வானொலி உரைகளை முன்வைத்து அவர் தனி ஒரு போராளி என கிண்டலடித்துள்ளது சிவசேனா.
இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் எழுதப்பட்டுள்ளதாவது:
சாதாரண மனிதனின் வலிகளை அகற்ற ஒரே மனிதர் போராடி வருகிறார். அவர் ஊழலுக்கு எதிராகவும், பொருளாதார கடினப்பாடுகளை அகற்றுவதிலும், வேலையின்மை, பணவீக்கம், பயங்கரவாதம், அரசியல் எதிரிகள், தனது கட்சியிலேயே சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் தலைவர்கள், என்று அனைத்து பிரச்சினைகளையும் எதிர்த்து ஒரே மனிதர் போராடுகிறார்!
இதனிடையே அயல்நாட்டுப் பயணங்கள் வேறு- நிலுவையில் உள்ள பணிகளை செய்கிறார், அயல்நாட்டிலிருந்து திரும்பியவுடன் மீண்டும் சாமானிய மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிறார். அவர் பீகார் தேர்தலின் பளுவையும் தானே சுமக்கிறார்.
இதை விட சாமானிய மக்களுக்கு ஒரு அரசாங்கம் என்னதான் செய்து விட முடியும்? அரசு அலுவலகங்களில் கடைநிலை பணிகளுக்கு இனி நேர்முகம் இல்லை என்று அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.
ஆனால் எவ்வளவு வேலைகள் காலியுள்ளன? யார் யாரெல்லாம் இந்தப் பணியை பெறப் போகிறார்கள்? அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் 360 பியூன் வேலைக்கு 23 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்தன. மும்பை நகராட்சியிலும் கூட 100 காலியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இவ்வாறு சாம்னாவின் தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.