சந்தேகங்களுக்கு பதில் தந்தால்தான் ராஜ்யசபாவில் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவு: உத்தவ் தாக்கரே
மும்பை: சிவசேனா எழுப்பியிருக்கும் சந்தேகங்களுக்கு பதில் கிடைத்தால்தான் ராஜ்யசபாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு தருவோம் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
லோக்சபாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு சிவசேனா ஆதரவு தெரிவித்தது. தேசத்தின் நலன் கருதி இம்மசோதாவை ஆதரிப்பதாக சிவசேனா அறிவித்திருந்தது.
தற்போது சிவசேனாவின் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சிவசேனா தலைவரும் மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே கூறியுள்ளதாவது:
ராஜ்யசபாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம். நாட்டின் எந்த ஒரு குடிமகனுக்கும் இம்மசோதா மீதான அச்சங்கள், சந்தேகங்கள் இருந்தால் அவற்றுக்கு பதில் தர வேண்டும்.
அமித் ஷாவிற்கு தடையா? நீங்கள் செய்வது தவறு.. அமெரிக்கா ஆணையத்திற்கு மத்திய அரசு பதிலடி!
இம்மசோதான மீதான அனைத்து சந்தேகங்களுக்கும் மத்திய அரசு பதில் தர வேண்டும். இந்திய குடியுரிமை பெறும் அகதிகள் எங்கே தங்கி இருப்பார்கள்? எந்த மாநிலத்தில் தங்குவார்கள் என்பதை எல்லாம் விளக்க வேண்டும். இதற்கு பதில் கிடைக்காத வரை மசோதாவை ராஜ்யசபாவில் ஆதரிக்கமாட்டோம்.
அரசை ஆதரிக்காவிட்டால் தேசதுரோகி என பிம்பத்தை உருவாக்குவதில் நம்பிக்கை கொண்டது பாஜக. இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.
முன்னதாக லோக்சபாவில் குடியுரிமை திருத்த மசோதாவை ஆதரித்த சிவசேனா, ராஜ்யசபாவில் வேறு மாதிரியான நிலைப்பாட்டை மேற்கொள்ளும் என அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.