பெயர் கெட்டுப் போச்சு: அவசர சட்டம் மூலம் வியாபம் பெயரை மாற்றும் ம.பி. முதல்வர் சவுகான்
போபால்: வியாபம் குறித்து அவசர சட்டம் கொண்டு வர மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் திட்டமிட்டுள்ளார்.
நாட்டையே உலுக்கி வரும் மத்திய பிரதேச தொழில்முறை தேர்வு வாரியம் அதாவது வியாபம் ஊழல் குறித்து அம்மாநில சட்டசபையில் சட்டம் கொண்டு வர அரசு முயற்சி செய்தது. மூன்று நாட்கள் நடந்த சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை செயல்பட முடியவில்லை.
இந்நிலையில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வியாவ்சாயிக் பரிக்ஷா மண்டல் அதாவது வியாபத்தை எம்.பி. பிரவேஷ் இவாம் பாரதி பரிக்ஷா மண்டல் என்று பெயர் மாற்ற திட்டமிட்டுள்ளார். வியாபம் பெயர் ஊழலுடன் தொடர்புடையதாகிவிட்டதால் சவுகான் இந்த முடிவை எடுத்துள்ளார். அவசர சட்டம் மூலம் இந்த பெயர் மாற்றத்தை அவர் கொண்டு வர உள்ளார்.
தலைமை செயலாளர் பதவிக்கு நிகரான ஒருவர் வியாபம் தலைவராகலாம் என்ற விதி உள்ளது. இந்நிலையில் இந்த விதிமுறையை மாற்றி ஓய்வு பெற்ற தலைமை செயலாளர்களை அந்த பதவிக்கு கொண்டு வர சவுகான் திட்டமிடுகிறார். அவரின் இந்த திட்டத்திற்கு அமைச்சர் பாபுலால் கவ்ர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சவுகான் அவசர சட்டம் கொண்டு வரப்போவதை தொழிற்கல்வி அமைச்சர் உமாசங்கர் குப்தா உறுதி செய்துள்ளார். ஆனால் சட்டம் எப்பொழுது கொண்டுவரப்படும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.