ம.பி.யில் ஆட்சியை இழந்தாலும், மக்களின் இதயங்களில் இடம் பிடித்த சிவராஜ் சிங் சவுகான்
போபால்: மத்திய பிரதேச முதல்வராக காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் பதவியேற்ற விழாவில், முன்னாள் முதல்வரான, பாஜகவின் சிவராஜ் சவுகான் நடவடிக்கை அனைவரையும் கவர்ந்தது.
மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா கட்சி அதைவிட 5 இடங்கள் குறைவாக 109 தொகுதிகளை கைப்பற்றியது.
ஆட்சி அமைக்க குறைந்தது 116 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், 2 எம்எல்ஏக்கள் பலம் கொண்ட பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.
பதவியேற்பு விழா
இதையடுத்து நீண்ட ஆலோசனைக்குப் பிறகு மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வு செய்யப்படுவதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. நேற்று, கமல்நாத் முதல்வராக பதவியேற்கும் விழா தலைநகர் போபாலில் நடைபெற்றது. இந்த பதவியேற்பு விழாவில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியை பிடித்து அசத்தி முதல்வராக பதவி வகித்தவரும், அம்மாநில மக்களால் "மாமா" என்று அன்போடு அழைக்கப்பட கூடியவருமான, சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார். 3 முறை தொடர்ந்து முதல்வராக பதவி வகித்தவர், சிறு சீட்டுகள் இடைவெளியில் ஆட்சியை இழந்துள்ள போதிலும், உற்சாகத்தோடு அந்த நிகழ்வில் அவர் பங்கேற்றார்.
புகைப்படம்
மேலும் விழா மேடையில் கமல்நாத் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மத்திய பிரதேச முன்னணி தலைவர்களில் ஒருவரும், அம்மாநில முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்தவருமான, ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் கைகளை தூக்கி பிடித்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். இந்த புகைப்படம் தேசிய அளவில் வைரலாக சுற்றி வருகிறது.
|
கோபம்
மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை பிடித்திருக்கலாம், ஆனால் பதவி ஏற்பு விழாவில் மக்களின் இதயங்களில் சிவராஜ் சிங் சவுகான் இடம் பிடித்து விட்டார் என்று கூறுகிறார்கள் நெட்டிசன்கள். அதேநேரம் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பங்காற்றியதாக குற்றம்சாட்டப்படும் கமல்நாத்தை முதல்வராக தேர்ந்தெடுத்து இருக்கக்கூடாது என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இதயங்கள்
மூத்த பாஜக தலைவர் ராம் மாதவ் ட்வீட்டரில், இதுபற்றி கூறுகையில், காங்கிரஸ் கட்சியை விட அதிகமான வாக்குகளை பெற்ற போதிலும், வெறும் ஐந்து இடங்களில் காங்கிரசை விட குறைவாக வெற்றி பெற்றிருந்த போதிலும், பதவி மீது மோகம் இல்லாமல் சிவராஜ் சிங் சவுகான் நடந்துகொண்டவிதம் என்பது பாராட்டத்தக்கது. அவர் இதயங்களை வென்றுவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.