விவசாயிகள் கோரிக்கை நிறைவேற உங்க தலையிலும் ஏறி உட்காருவோம்: மத்திய அரசுக்கு சிவசேனா மிரட்டல்
மும்பை: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசின் தலையிலும் ஏறி உட்கார்ந்து போராடுவோம் என்று சிவசேனா கட்சி மிரட்டல் விடுத்துள்ளது.
இது தொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா'வின் தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளதாவது:
விவசாயிகள் தற்கொலை குறித்து ராஜ்யசபாவில் சிவசேனா எம்.பி. அனில் தேசாய் கேள்வி எழுப்பினார். இதற்கு அளிக்கப்பட்ட பதில் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.
பருவம் தவறிய கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்குமாறு பலமுறை மத்திய அரசிடம் வலியுறுத்தியதாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார். ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் அளித்த பதில், முதல்வரின் வலியுறுத்தலை செல்லுபடியற்றதாக்கி விட்டது.
விவசாயிகளின் நிவாரணம் தொடர்பாக மத்திய அரசு எந்த வேண்டுகோளையும் பெறவில்லை என்கிறார் அவர்... அவரது கருத்துக்கு மாநில விவசாய அமைச்சர் ஏக்நாத் கட்சே பதிலளிக்கையில், ராதாமோகன் சிங் கூறியதில் உண்மை இல்லை என்கிறார்.
மற்றவர் கூறுவது பொய் என்பதை மெய்ப்பிக்க இரண்டு அமைச்சர்களுமே முயற்சிக்கின்றனர்.. அப்படி என்றால் உண்மை பேசும் அமைச்சர் யார்? தங்களுக்கு ஏற்பட்ட இடையூறுகளில் இருந்து விவசாயிகளால் இன்னமும் மீள முடியவில்லை. ஆனால், மத்திய, மாநில அமைச்சர்கள் தங்களுக்குள் வார்த்தை விளையாட்டு விளையாடுகிறார்கள்.
விவசாயிகளின் சாபத்துக்கு பாரதிய ஜனதா கட்சியினரே ஆளாகாதீர்கள். உண்மையை பேசுங்கள். பாரதிய ஜனதா அரசுக்கு நாங்கள் ஆதரவு அளித்தாலும், அவர்களுக்கு முன்பாக தலைகுனிந்து நிற்கமாட்டோம்.
தேவைப்படும் போதெல்லாம் விவசாயிகளுக்காக குரல் கொடுப்போம். விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற இந்த அரசின் தலையில் ஏறி அமரவும் நாங்கள் தயங்க மாட்டோம்.
இவ்வாறு சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டு உள்ளது.