பாஜகவுடனான கூட்டணியை முறித்தது சிவசேனா- லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டி என அறிவிப்பு!
பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது சிவசேனா.
மும்பை: மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக சிவசேனா அதிரடியாக அறிவித்துள்ளது. 2019 மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் எனவும் சிவசேனா அறிவித்துள்ளது.
மும்பையில் சிவசேனாவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 2019-ம் ஆண்டு நடைபெறும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல 2019-ம் ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி அமைக்காமல் தனித்தே போட்டியிடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே, சிவசேனாவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசில் சிவசேனா இடம்பெற்றுள்ளது. மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவது குறித்து சிவசேனா எதுவும் தெரிவிக்கவில்லை.
சிவசேனாவின் இந்த அறிவிப்பு பாஜகவுக்கு பின்னடைவு எனக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் பாஜகவுடன் ஆட்சி பகிர்வு, தொகுதி பேரங்களுக்கான சிவசேனாவின் நாடகம் இது என்பதும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து,