இது "ஹக்" இல்லை.. மோடிக்கு ராகுல் கொடுத்த "ஷாக்".. சிவசேனா நக்கல்!
Recommended Video
மும்பை: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடியை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்டிப்பிடித்து கை குலுக்கியதற்கு சிவசேனா கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.
இதை ஹக் என்று சொல்லாதீர்கள். இது மோடிக்கு ராகுல் காந்தி கொடுத்த ஷாக் என்றும் சிவசேனா வர்ணித்துள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிதான் சிவசேனா. ஆனால் அது ராகுலுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறது. ராகுல் காந்தி நாட்டை வழி நடத்தும் தகுதி படைத்தவர் என்றும் சிவசேனா கூறி வருகிறது.
பாஜகவுடன் சிவசேனா தொடர்ந்து முரண்டு பிடித்தபடிதான் உள்ளது. இதனால் இவர்களுக்குள் கூட்டணி இருக்கிறதா இல்லையா என்பதே பெரிய குழப்பமான விஷயமாகும். மேலும் நேற்று நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது சிவசேனா வெளிநடப்புச் செய்தது. இது பாஜகவுக்கு சாதகமாகவே போனது. அதேசமயம், மோடியை, ராகுல் காந்தி கட்டிப்பிடித்ததை பாராட்டியுள்ளது சிவசேனா.
இதுகுறித்து சிவசேனா தலைவர் சஞ்சய் ராத் கூறுகையில், அரசியல் பள்ளியில் இப்போதுதான் பட்டம் வாங்கியுள்ளார் ராகுல் காந்தி. இது பாராட்டுக்குரியது. பிரதமர் மோடியை, ராகுல் காந்தி கட்டி அணைத்தது பாராட்டுக்குரியது.
உண்மையில் இது ஹக் இல்லை. பிரதமருக்கு அவர் கொடுத்த ஷாக். மக்கள் இதை நாடகம் என்பார்கள். ஆனால் அரசியலே ஒரு நாடகம்தான். நாடகம் இல்லாத அரசியலைப் பார்க்க முடியாது.
நாங்கள் வாக்கெடுப்பை புறக்கணிக்கும் முடிவை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே துணிச்சலாக எடுத்தார். அதற்காக அவரைப் பாராட்டுகிறேன். இப்படிப்பட்ட முடிவை எடுக்க தைரியம் தேவை. அது உத்தவ் தாக்கரேவிடம் உள்ளது என்றார் சஞ்சய் ராத்.
பாஜகவுக்கு எதிராக பேசினாலும் கூட மகாராஷ்டிரா மற்றும் மத்தியில் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியிலும் பங்கேற்றுள்ளது சிவசேனா என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், 2019 லோக்சபா தேர்தலை தனியாக சந்திக்கப் போவதாகவும் ஏற்கனவே சிவசேனா அறிவித்துள்ளது.